அழகிரி அவரது தாய்-தந்தையை சந்தித்ததாக 'கேள்விப்பட்டேன்': ஸ்டாலின் சுருக் பேட்டி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசியது குறித்து கருத்து தெரிவித்த, மு.க.ஸ்டாலின், அவர் தனது தந்தை-தாயை சந்தித்ததாக செய்தி 'கேள்விப்பட்டேன்', அதை அரசியலாக்காதீர்கள் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கருணாநிதியை, திடீரென கோபாலபுரம் இல்லத்தில் அழகிரி இன்று சந்தித்து பேசியுள்ளார். 2014ம் ஆண்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். சந்திப்பு குறித்து அழகிரி கூறுகையில், தந்தை என்ற முறையில் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்ததாக தெரிவித்தார்.

ஆனால், திமுக கூட்டணியில் தேமுதிக இணையாமல், மக்கள் நல கூட்டணியுடன் இணைந்துவிட்டதால், தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த அழகிரி தேவை என்ற நோக்கத்தில் அழகிரியை கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் எனவும், எனவே மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்க்கும் அறிவிப்பை திமுக தலைமை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
அழகிரி கட்சியி்ல் சேர்க்கப்பட்டால், ஸ்டாலினின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பது அவரது ஆதரவாளர்கள் கவலையாக உள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் அறிவாலயத்திற்கு வந்த ஸ்டாலினிடம் நிருபர்கள், இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது ஸ்டாலின் கூறியாதாவது: அவர் தனது தாயாரையும், தந்தையாரையும் பார்ப்பதற்காக வந்ததாக நான் செய்தி கேள்விப்பட்டேனே தவிர, எந்தவிதமான, கட்சி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அதில் இல்லை. தேவையில்லாமல் நீங்கள் (நிருபர்கள்) அதை குழப்ப வேண்டாம், என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு, பதிலளித்த ஸ்டாலின், "நாளை கருணாநிதியை சந்திக்க குலாம்நபி ஆசாத் வருவதற்காக நேரம் கேட்டுள்ளார். எப்போது நேரம் தரப்படும் என்பது இன்று மாலை தெரியவரும்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் மனிதநேய மக்கள் கட்சியுடன், திமுக தொகுதி உடன்பாடு செய்துகொள்ள உள்ளது" இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
இதன்மூலம் அழகிரியை கருணாநிதி சந்தித்ததை ஸ்டாலின் விரும்பவில்லை என்பது புலப்படுகிறது. இந்த விஷயத்தில் கருணாநிதி- ஸ்டாலின் இடையே புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications