அழகிரி ஒருபுறம்... உட்கட்சி பூசல் மறுபுறம்... தடுமாறும் திமுக வேட்பாளர்கள்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி கொடுக்கும் குடைச்சல் ஒருபுறம் இருக்க திமுகவிற்குள்ளேயே இருக்கு ஜாதி உட்பூசல்களால் திமுக தலைமை அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாம்.
கட்சித்தலைமை எத்தனையோ எச்சரிக்கைகளை செய்தும், மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் பகிரங்கமாக பாஜகவிற்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊர் ஊராகப் போய் வேட்பாளர்களின் தகுதி பற்றி பேசும் அழகிரியின் தாக்குதல்களால் ஆடிப்போயிருந்தாலும், உட்கட்சியில் ஜாதி ரீதியான விரிசலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கிறதாம் திமுக தலைமை.

அமெரிக்க பயணம் ரத்து
அப்பா அழைத்து சமாதானம் பேச வேண்டும் என்பது அழகிரியின் பிளான். அதற்காகவே தன்னுடை அமெரிக்க பயணத் திட்டத்தை ரத்து செய்து விட்டாராம் அழகிரி. அழைத்துப் பேசும் பட்சத்தில், கட்சியைக் காப்பாற்ற தலைவரின் பேச்சுக்கு கட்டுப்படுவேன் என்று கூறிவிட்டு உடனே அமெரிக்கா சென்றுவிடும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

வைகோவிற்கு ஆதரவு
அதே சமயம் விருதுநகரில் வைகோவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துவிட்ட அழகிரி, அது தொடர்பாக தனது ஆதரவாளர்களுக்கும் உத்தரவு போட்டுள்ளாராம். தவிர தென் மாவட்ட தொகுதிகளில் குறிப்பாக தென்காசி, தேனி, திண்டுக்கல்லில் திமுகவை ஜெயிக்க விடக்கூடாது என்பதும் அழகிரியின் உத்தரவாம்.

கோவையில் அழகிரி ஆதரவாளர்கள்
இந்த நிலையில் கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிமுகக் கூட்டத்தில், அழகிரி ஆதரவாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனராம். இது பாஜகவினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஜாதி பூசலில் திமுக
இது ஒருபுறம் இருக்க, சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் ஜாதி ரீதியிலான சிக்கல் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளதாம். பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை கிருஷ்ணகிரி தொகுதியின் பொறுப்பாளராக போட்டும், அவர் அங்கே போகாமல் சேலத்திலேயே தங்கிவிட்டாராம். காரணம், அங்கே ஜி.கே.மணிக்கு எதிராக வேலை செய்ய விடாமல் ஜாதி பாசம் தடுக்கிறதாம். அதேபோல சேலத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கவுண்டர் இனத்தை சேர்ந்தவராம்.

கள்ளக்குறிச்சி கலாட்டா
அதேபோல கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, மணிமாறன், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவராம். ஆனால் அங்கே பொறுப்பாளராக இருக்கும், சேலம் சிவலிங்கம், உடையார் இனத்தைச் சேர்ந்தவராம். அவரும், அங்கே இருக்கும், சில உடையார் நகரச் செயலாளர்களும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதால் திமுக தலைமை அப்செட் ஆகியுள்ளதாம்.

எப்படி சமாளிப்பது?
ஜாதி பாசத்தையும், அழகிரி கொடுக்கும் குடைச்சலையும் தாண்டி எப்படி வெல்வது என்று யோசித்து வருகின்றனராம் திமுகவினர்.












Click it and Unblock the Notifications