கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு.. கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம்?
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் இல்லத்தில் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.
Recommended Video

சென்னை: நீண்ட நாளாக கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்து ஒதுங்கியிருந்த அழகிரி நீண்ட நாளைக்கு பின் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
கருணாநிதியின் குடும்பத்தில் அனைவரும் இலை மறைவு காயாக செயல்படும் நிலையில், அதிரடியாகவும் தடாலடியாகவும் செயல்படுபவர் கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிரி.
கடந்த பல வருடமாக கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுங்கி அரசியல் நிகழ்வுகளை கவனித்துவந்த அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கருத்துகளை தெரிவித்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற போட்டியில் காணாமல் போன அழகிரி தற்போது நீண்ட நாளுக்கு பின் தனது தந்தையை சந்தித்துள்ளார்.

கருணாநிதியின் செல்லம்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் மீது கொண்ட பற்றால் தனது இரண்டாவது மகனுக்கு அந்த பெயரை சூட்டினார் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போலவே சிறுவயதிலிருந்து செயல்பட்டு வந்த அழகிரி ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளார். மூத்த பிள்ளையான மு.க.முத்து சினிமாவில் பிரபலமாக வேண்டும் என உழைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அரசியலில் அழகிரி உருவாகிக்கொண்டிருந்தார்.

அழகிரிக்கு கட்சிப்பதவி.
கட்சியில் பதவி ஏதுமில்லை என்றாலும் மதுரை சுற்றுவட்டார தென் மாவட்டங்களில் திமுக தொடர்பான முடிவை அழகிரி எடுக்கும் அளவிற்கு முன்னேறினார்.கட்சியில் உள்ள தலைவர்களின் அதிருப்தி, ஸ்டாலினின் அதிருப்தி என பலமுனை தாக்குதலுக்கு ஆளானதால் சில காலம் அழகிரி கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டது. பின்னர் அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் என புதிய பதவியை உருவாக்கி கொடுத்தார் கருணாநிதி.

அழகிரி ஸ்டைல்
அழகிரிக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கிறது, அதுதான் அவரின் அரசியல் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அவரை நம்பி வரும் ஆதரவாளர்களுக்காக அவர் எந்த நிலையிலும் இறங்கி வேலை செய்வார், அவர்களை எதிலிருந்தும் காப்பாற்றுவார் என்பது தான் அது. இதுவே அவருக்கு ஆதரவாளர்கள் பெருக காரணமாக இருந்தது.ஆனால் அழகிரியின் அந்த ஸ்டைலே அவருக்கு எதிராக அமைந்தது. கட்சிக்கு எதிராக நடப்பதாக கூறி அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கஜினி முகமது அழகிரி
நீக்கப்பட்ட பின் கட்சியிலிருந்து குடும்பத்திலிருந்தும் ஒதுங்கியிருந்த அழகிரி, ஆர்கேநகர் தேர்தல் குறித்து அதிரடி கருத்துகளை தெரிவித்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார். ஸ்டாலினை நேரடியாக தாக்கிய அவர், ஸ்டாலின் கருணாநிதியாக எப்போதும் ஆக முடியாது என்றும், அவர் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்றார். இந்நிலையில் அவர் இன்று தந்தை கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்து பேசியுள்ளாரர். பலமுறை கட்சியிலிருந்து நீக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் கஜினி முகமது போல மீண்டும் மீண்டும் படையெடுக்கும் அழகிரியின் இந்த வரவு, என்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பது விரைவில் தெரிந்து விடும். புத்தாண்டு வாழ்த்து கூற கருணாநிதியை சந்திக்க வந்ததாக அழகிரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications