தொடங்கியது உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. இளைஞர்கள், பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தடையை உடைத்து நடக்கும் இந்த போட்டியை காண பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
அலங்காநல்லூர்: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியில் 900க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை பிடிக்க 1500 இளைஞர்களும் ஜல்லிக்கட்டு களத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையால் 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம், புரட்சியினால் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியாகி உள்ளது.

இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி அவனியாபுரத்திலும், பாலமேட்டில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற உள்ளன. காளைகளை அடக்க 1500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு போட்டியை காண இப்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருப்பதால் சுமார் 3 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications