ஜெ. இட்லி, தோசை சாப்பிட்டார் என பொய் கூறிய அமைச்சர்கள் மீது நீதி விசாரணை தேவை... சீமான்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நலம் குறித்து பொய் சொன்ன அமைச்சர்கள் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்தார
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இனிப்பு சாப்பிட்டார் என்று பொய் கூறிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கோரியுள்ளார்.
உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நோய் தொற்று ஏற்படும் என்று கூறி அவரை பார்க்க தமிழக ஆளுநர் உள்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொய் கூறினோம்
இதுகுறித்து மதுரையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய். அமைச்சர்களாகிய நாங்கள் பொய்கூறியதற்கு மன்னித்துவிடுங்கள்.
சசிகலா கூறியது...
ஜெ. உடல்நிலை குறித்து சசிகலா என்ன கூறினாரோ அதைத் தான் நாங்கள் கூறினோம். ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றார்.
எல்லாம் விளையாட்டு
இந்நிலையில் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியல் அனைத்தும் விளையாட்டாகிவிட்டது.
நீதி விசாரணை தேவை
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என்று கூறிய அனைத்து அமைச்சர்கள் மீதும் நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் தினகரன் வெளியிட வேண்டியதுதானே என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.