தலித் இளைஞர் கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது என்கிறார் திருப்பூர் எஸ்.பி
சென்னை: உடுமலையில் சங்கர் என்ற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துவிட்டோம். என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார். வழக்கின் தன்மை கருதி கைதானவர்கள் யார்? எத்தனை பேர் ? என இப்போது தெரிவிக்க இயலாது, என்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார்.
ஜாதி மாறி திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர் சங்கர் - கவுசல்யாவை உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவர்களை வெட்டியவர்கள் கவுசல்யாவின் உறவினர்கள் என்பது தெரியவரவே, சங்கர் வீட்டினர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கவுசல்யாவின் தந்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து கொலையாளிகள் மூவர் அவர்களுக்கு தஞ்சம் அளித்த நண்பர் ஒருவர் என்று 4 பேரையும்போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியானது. பழனியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட எஸ்.பி, சரோஜ்குமார் தாக்கூர், சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட்டோம் என்றார். வழக்குத்தன்மையை கருதி கைதானது எத்தனை பேர் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என்று கூறிய அவர், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் தெரிவிக்கப்படும் என்று எஸ்.பி.கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
தாய், மாமன் எங்கே?
இதனிடையே, கைது செய்யப்பட்ட கொலையாளிகளை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்பே பழனியில் உள்ள கவுசல்யாவின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. திட்டமிட்டே இந்த கொலையை கவுசல்யாவின் பெற்றோர் நடத்தியுள்ளனர். தற்போது கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications