4 மடங்கு அதிக மழையால் வெள்ளக்காடான திருவள்ளூர்... முகாம்களில் ஏராளமானோர் தஞ்சம்
திருவள்ளூர் : வடகிழக்குப் பருவமழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்தான். அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழியும் நிலையில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன என்பதுதான் வேதனை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான்கு மடங்கு மழை அதிகம் பெய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
இதில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டில் இதே நவம்பர் மாதத்தில் 14.2 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட 4 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் விதத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் ஒரு துணை கலெக்டர், 4 தாசில்தார்கள் இருக்கிறார்கள். 11 தாலுகாக்களில் இந்த 22 குழுக்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 111 மீட்பு முகாம்களில் 8 ஆயிரத்து 423 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 18 ஆயிரம் பேர் வெளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்காக 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால், அதை தடுப்பதற்காக ஒரு குழுவில் 4 மாவட்ட அலுவலர்கள் அடிப்படையில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications