தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை குழிதோண்டி புதைக்கும் அடுத்தடுத்த தீர்ப்புகள்!
தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவையே ஆழ குழிதோண்டி புதைக்கும் வகையில் அடுத்தடுத்த தீர்ப்புகள் வந்துள்ளன.
சென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை குழிதோண்டி புதைக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இன்று அடுத்தடுத்த தீர்ப்புகளை வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் தேசிய அளவிலான தகுதி தேர்வை தமிழகம் மிகக் கடுமையாக எதிர்த்தது. நீட் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
பாழாய் போகும் கனவு
ஆனால் தமிழக மாணவர்களில் பெரும்பாலானோர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். இதனால் நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாய் போகும் என்பதால் எதிர்க்கப்பட்டது.
தமிழகம் பாதிப்பு
இருப்பினும் நீட் தேர்வு எதிர்ப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது. தமிழகம் அஞ்சியபடியே நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சியடையவில்லை.
உள்ஒதுக்கீடு
மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெறாததால் அந்த படிப்பையே கைவிடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளியிட்டது.
உயர்நீதிமன்றம் தடை
இதற்கும் வேட்டு வைக்க சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இப்போது தமிழக அரசின் 85% உள் ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து பேரிடியை தூக்கிப் போட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றமும் எதிராக தீர்ப்பு
இந்தப் பேரிடி விழுந்த சிறிது நேரத்திலேயே உச்சநீதிமன்றம் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டது. நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குழிதோண்டி புதைப்பு
ஆனால் உச்சநீதிமன்றமோ, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை ஏதும் இல்லை; நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவிட்டுவிட்டது. இப்படி அடுத்தடுத்த தீர்ப்புகளால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு என்பது மண்ணோ மண்ணாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.