இறுக்கமான சூழலிலும்.. மனதுக்கு இதம் கொடுத்த இரவு.. கருணாநிதியை காண ஓடி வந்த பல கட்சி தலைவர்கள்!
கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க அனைத்து கட்சி தலைவர்களும் கோபாலபுரம் சென்றனர்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய தமிழகம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழகத்தை தற்போது இறுக்கமான நிலை சூல்கொண்டுள்ளது. அரசியல் களம் தற்போது கனத்த இதயத்துடன் பயணித்து கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த பயணத்தில் சில நேர்மறை உணர்வுகள் உலா வருகின்றன.
வேறுபட்ட அரசியல் இதயங்கள் அனைத்தும் நேற்றிரவு ஒன்றிணைந்தன. நேருக்கு நேர் பார்த்தாலும் கூட பேசிக் கொள்ளாத, பேச மனமில்லாத, மனங்கள் கூட கைகோர்த்தன. இந்த அரசியல் நிகழ்வு கண்டு தமிழகமே லேசாக பூரித்தது. அனைவரையும் ஒரே நேரத்தில் பார்க்கும்போது, இனம் புரியாத ஒரு உணர்வு தானாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒட்டிக் கொண்டது.
முன்பெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்hர மரியாதையும் நட்புணர்வும் நீடித்து வந்தது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம்.
தந்தை பெரியார்-ராஜாஜி
ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர் ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
பல மேடைகளில் சந்திப்பு
அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் - கலைஞர் கருணாநிதி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்திருந்தாலும் அவர்களுக்குள்ளான நட்பும் மரியாதையும் இறுதி வரை குறையவில்லை. என்றாலும் பல திருமண மேடைகள் உள்ளிட்ட பொது விழாக்களில் கலந்து கொண்டு அளவளாவி பேசி மகிழ்ந்துள்ளனர்.
ஸ்டாலினும்-ஜெயலலிதாவும்
இதற்கு அடுத்தாற்போல சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற போது ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வு ஒரு பெரிய மாற்றம் எனலாம். அதேபோல, தானே புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியதும் நடந்திருக்கிறது. அவ்வளவு ஏன், கட்சியிலிருந்து விலகி சென்ற வைகோவின் தாயார் மறைந்த போது, கலிங்கப்பட்டிக்கே சென்று துக்கம் விசாரித்தார், ஸ்டாலின்.
வெறும் வார்த்தைகள்தான்
ஆனால் பொதுவாக பார்த்தால், தமிழகத்தின் மாறுபட்ட அரசியல் தலைவர்கள் என்றாலே ஒருவர் வீட்டு நல்லது கெட்டதுகளில் பங்கேற்பதும், பொது இடங்களில் சந்தித்து கொள்வதும் குறைவாகவே தென்பட்டது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும்கூட யாரும் சந்தித்து கொள்வதுகிடையாது. சந்தித்து கொண்டாலும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது கிடையாது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சி செலுத்த ஆரம்பித்த பின்னர்தான் அரசியல் நாகரிகம் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமாகிப்போனது.
கருணாநிதியின் ஆதங்கம்
டெல்லியில் வெவ்வேறு கட்சி சார்புடையவர்கள் கூட ஒன்றாக ஒரே மேடையில் அமர்வதை காணும்போதெல்லாம், நம் தமிழகத்துக்கு மட்டும் என்ன வந்துவிட்டது? என்று திமுக தலைவரே இதை நிறைய முறை மேடைகளில் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அப்படி அவரது ஆதங்கத்துக்கு பதில் நேற்றிரவு கிடைத்தது. அவரது கவலைக்கு தீர்வு நேற்றிரவு நடந்தது.
நிறைவேறுமா?
அவரை சந்திப்பதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கோபாலபுரத்துக்கு விரைந்து வந்தனர். ஸ்டாலினிடம் மனம் விட்டு பேசி, தந்தையின் உடல்நலம் குறித்து கேட்டு சென்றனர். நேற்றிரவு அந்த புகைப்படங்களை பார்க்கும்போது, கலைஞரின் ஆதங்கமும், அவரது ஆசையும், எதிர்ப்பார்ப்பும் ஓரளவு நிறைவேறின மாதிரி வந்து எட்டி பார்த்து விட்டு சென்றது.
ஒவ்வொரு தமிழனின் ஆசையும்
எப்போதும் இதே போன்ற ஒரு ஒற்றுமையை, தமிழக அரசியல் தலைவர்கள் எப்போதும் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?! அனைத்து மக்கள் பிரச்சனைகளையும் இதுபோன்று அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்தால் அரசியல் களம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும்? அதுபோன்ற ஒரு இனிமையான சூழல் இனி தமிழக அரசியலில் நடக்கவேண்டும். இது கருணாநிதியின் ஆசை மட்டும் இல்லை. ஒவ்வொரு தமிழனின் ஆசையும், எதிர்பார்ப்பும்தான்.