புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை... ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்குவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அல்லன்ய்ஸ் நிறுவனம் இந்த சேவையை நடத்தவுள்ளது.
அன்றைய தினம் புதுவையிலிருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு முதல் புதுவையில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. புதுவையில் இருந்து பெங்களூருக்கு 6 நாட்கள் சிறிய ரக ஏ.டி.ஆர். விமானம் இயக்கப்படும்.
புதன்கிழமை இந்த விமானம் இயக்கப்படாது. இந்த விமானத்தில் 48 இருக்கைகள் இருக்கும். விமானம் பெங்களூரில் இருந்து தினமும் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு புதுவைக்கு 4.45 மணிக்கு வந்து சேரும். மீண்டும் புதுவையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு 6.05 மணிக்கு சென்றடையும்.
அங்கிருந்து மும்பை, கொல்கத்தா, டெல்லி, இந்திய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் இதன் மூலம் இணைப்பு சேவை கிடைக்கும். ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் இந்த விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் புதுவை அரசுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.