இந்தக் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது... சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று பாஜக மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, நேற்று மதியம் நாகர்கோவில் வந்தார் வைகோ.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னதும் முதல் ஆதரவு கொடுத்தவர் வைகோ. எப்போதும் ஒரு செயலை செய்யும்போது முதலுக்கு மோசம் வந்துவிடாமல் இருக்க ஒன்றை தக்கவைப்போம்.
அப்படி முதலில் நாங்கள் தக்க வைத்தது ம.தி.மு.க.வைத்தான். என்னை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல் தலைவராக வைகோ வந்திருப்பது சிறப்புக்குரியது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற காலத்திலும் இந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும். 2014 தேர்தலோடு முடியும் கூட்டணியாக நான் நினைக்கவில்லை. அதையும் கடந்து செயல்படும்'' என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
இன்றைய தினம் விருதுநகர் தொகுதியில் வைகோவிற்கு ஆதரவாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 5 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.