தேமுதிக தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி.. விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதுவரை தனித்தே நிற்கப்போகிறோம் என்று சொல்லி வந்த அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான வேலைகளை இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணையப் போகும் கட்சிகள் குறித்தும், மூன்றாவது அணி உருவானால் அதற்கு தலைமை தாங்க போவது யார் என்பது குறித்தும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருந்து வருகிறது.

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டமைப்பு என்ற புதிய அணியை உருவாக்கியது. இதனை பலப்படுத்துவதற்கான முயற்சியில் வைகோ, திருமாவளவன், மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சி விலகியதால் கூட்டணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
ஒருபுறம் பாமக நிறுவனர் டாகடர். ராமதாஸ், திமுக, அதிமுகவைத் தவிர, அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் ஏற்கத் தயார் என்று அறிவித்தார்..
இந்நிலையில், விஜயகாந்த்தை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் திமுக, பாஜக ஆகிய கட்சிகள் மும்மரமாக இறங்கியுள்ளன. சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்த வைகோவும், விஜயகாந்தும் அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து
தே.மு.தி.க. மக்கள் நல கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று வைகோ தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வரும் விஜயகாந்த் எந்த பக்கம் சாய்வார் என்பது இதுவரை கணிக்க முடியாததாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணிப்பள்ளம் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது,
தமிழகத்தில் வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளில் தே.மு.தி.க. முதலிடத்தில் உள்ளது. இதனால் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றார் விஜயகாந்த். இதன் மூலம் தேமுதிகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் தேமுதிகவினர் உறுதியோடு இருக்கின்றனர்.
இதனை பாஜக ஒருபுறம் ஏற்றுக் கொண்டாலும், மக்கள் நலக் கூட்டமைப்பில் இருக்கும் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி இருந்து வருகிறது. ஒருவேளை முதலில் கூட்டணிக்கான அச்சாரத்தை அமைத்து தேர்தலுக்குப் பிறகு தலைமையை அறிவிக்கும் வியூகத்தை வைகோ கையில் எடுக்கலாம் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications