பெரிதாகும் பேஸ்புக் தகவல் திருட்டு பிரச்சனை.. யார் இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.. என்ன நடந்தது?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருக்கிறது.

சேனல் 4 கண்டுபிடித்தது
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் வீடியோவில் இதை ஒப்புக்கொள்வது வெளியாகி உள்ளது.

யார் இவர்கள்
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது.

பேஸ்புக்கில் என்ன செய்தார்கள்
இவர்கள் பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு பேஸ்புக் பயனாளிகளையும் மயக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை, அவர்கள் திருடிய தகவலை வைத்து உருவாக்குகிறார்கள்.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
இதுவரை மொத்தம் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளில் விவரங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். 50 மில்லியன் மக்களின் தகவலை வைத்து அவர்களை எப்படி எல்லாம் தேர்தலில் மாற்றி ஒட்டு போடா வைக்க முடியுமோ அப்படி எல்லாம் செயல்பட வைப்பார்கள். இதற்கு உலகின் டெக் ஜாம்பவான்கள் பணியாற்றியுள்ளார்கள்.

உங்கள் ஊர்
உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள், அதுவும் உங்களுக்கு பிடித்தது போல. மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள்.

அமெரிக்க தேர்தல் முடிவு
இதன் மூலம் ஒரு தலைவர் பற்றிய உங்கள் பார்வையை மாற்றி உங்களை வேறு ஒரு நபருக்கு ஒட்டு போட வைப்பார்கள். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் இப்படித்தான் வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அதேபோல் ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியே நடந்த வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் கோல்மால் வேலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.

எப்படி
பேஸ்புக் மூலம் மக்கள் மனதை மாற்றுவதோடு, பணம் கொடுத்து அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தலில் நேரடியாக மோசடி செய்ய அதிகாரிகளுக்கு நிறைய 'கமிஷன்' கொடுத்து இருக்கிறார்கள். விலைமாதுக்களை ஏற்பாடு செய்வது, லஞ்சம் கொடுப்பது, வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது, பதவி உயர்வு கொடுப்பது என பல வேலைகளை செய்து இருக்கிறார்கள்.

தகவல் திரட்டுவது எப்படி
இவர்கள் பேஸ்புக் கணக்கில் தகவல்களை திருடுவது மிகவும் சுவாரசியமான ஒன்று. பேஸ்புக்கில் சமயங்களில் சில விளையாட்டுகள் வைரல் ஆகும். அதை கிளிக் செய்தால் நமக்கு எப்போது திருமணம் நடக்கும், நமக்கு எப்போது மரணம் வரும், முன்ஜென்மத்தில் எப்படி இருந்தோம் என்று சொல்லும். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, நம்முடைய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் எடுத்துவிடும். இப்படித்தான் உலகம் முழுக்க 50 மில்லியன் கணக்குகளை அபேஸ் செய்து இருக்கிறார்கள்.

மாட்டிக்கொண்டார்
இலங்கையில் அடுத்து நடக்கும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறி இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சேனல் 4ல் வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் எடுத்த வீடியோதான் இப்போது வெளியாகி உள்ளது. வீடியோ வெளியான ஒரு வாரத்திற்கு முன்பே இதைப்பற்றிய கட்டுரை வெளியாகிவிட்டது.

பேஸ்புக் என்ன சொல்கிறது
இதுகுறித்து பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட இருக்கிறது. ஏனென்றால் இந்த நிகழ்வு மொத்தமும் பேஸ்புக்கிற்கு தெரிந்துதான் நடந்தது என்று கூறப்படுகிறது. மார்க் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை.












Click it and Unblock the Notifications