அம்பத்தூர் பால் பண்ணையைச் சுற்றிலும் தண்ணீர்- பால் பாக்கெட் விநியோகம் பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் அம்பத்தூர் பால் பண்ணையை சுற்றி தண்ணீர் நிற்கிறது. இதனால் மற்ற பகுதிகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக கொரட்டூர் ஏரி நிரம்பி, உபரி தண்ணீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து விட்டது.

இதனால் கொரட்டூர் - பட்டரைவாக்கம் ரோடு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கொரட்டூரில் அமைந்துள்ள அம்பத்தூர் பால் பண்ணையிலும் தண்ணீர் புகுந்து விட்டது. நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி கிடந்தாலும் பாக்கெட் பால் தயாரிப்பு பணி பாதிக்கப்படவில்லை.
ஆனால் நேற்று பால் பண்ணையில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து விட்டது. பால் பண்ணையை சுற்றிலும் வெள்ளக்காடாக தண்ணீர் நின்றதால் ஊழியர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மின்சாரமும் நேற்று காலையில் இருந்து இல்லை.
இதனால் பால் லாரிகள் உள்ளே வர முடியாததால் பாக்கெட் பால் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக விழுப்புரம், காக்களூர் பகுதியில் இருந்து சென்னைக்கு பாக்கெட் பால் வரவழைக்கப்பட்டு இன்று வினியோகிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து பாக்கெட் பால் வந்ததால், சென்னையில் சில பகுதிகளில் பால் சப்ளை தாமதமானது.
சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணையில் தண்ணீர் தேங்கினாலும் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அங்கு பாக்கெட் பால் தயாரிப்பு பணி தடையின்றி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications