தொடர்ந்து கொட்டும் கனமழை.. நாளை நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியது முதலே கணிசமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழை கொட்டி வருகிறது. நாளை தினமும் நீலகிரியில் அதி தீவிர மழை இருக்கும் வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சியை மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்கே நீர்ப்பிடி பகுதிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
நீலகிரி மழை: குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களால் சகஜமாக வெளியே கூட சென்று திரும்ப முடிவதில்லை.
4 தாலுகாவில் விடுமுறை:இப்போதும் கூட அங்கு மழை கொட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பிலும் கூட நீலகிரியில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கன முதல் அதி கனமழையும்: கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
கொட்டும் கனமழை: நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications