மதுவிலக்குக்கு நடுவே குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 28 பேர் பலி.. தொடர்ந்து உயரும் உயிரிழப்பு..
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர்டெலிவரியாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கிடையே தான் கள்ளச்சாராயம் குடிப்பவர்களில் சிலர் பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது.

40 பேருக்கு உடல் நலக்குறைவு
குறிப்பாக குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் ரோஜிட் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிலர் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து 40க்கும் அதிகமானவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுது்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

28 பேர் பலி
கள்ளச்சாராயம் குடித்து மயங்கியவர்கள் போடாட், பாவ் நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவரும் இறந்து வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 18 பேர் இறந்தனர். இன்று மதியம் மேலும் 10 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. மற்றவர்களும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எதிர்க்கட்சியினர் கண்டனம்
இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைய சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அமித் சாவ்தா கூறுகையில், "கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு போலீஸ்காரர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் ஆதரவு வழங்குகின்றனர். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இதனால் தான் கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர்கிறது'' என குற்றம்சாட்டினார். முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் 2 நாள் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‛‛மாநிலத்தில் மதுவிலக்கு என்பது என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்பது கடுமையாக பின்பற்றப்படும்'' என்றார். பாஜகவின் அல்பேஷ் தாகூர் கூறுகையில், ‛‛கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துவேன். அதோடு மதுவிலக்கு சட்டத்தை மாநிலத்தில் கடுமையாக்க கூறுவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications