Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா வாரச்சந்தை அமைக்க மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா வாரச்சந்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா வாரச்சந்தை அமைப்பது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகரில், அம்மா வாரச்சந்தை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அம்மா மாளிகையில் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்தில் கமிஷனர் தா.கார்த்திகேயன் முன்னிலையில் அரசின் 25 சேவைத்துறைகள், 32 மாவட்ட ஆட்சியர்கள், 45 பொதுத்துறை வங்கிகள், 27 ஏற்றுமதி நிறுவனங்களை சார்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 Amma market, meeting Headed by Mayor Duraisamy

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் விவரம் பின்வருமாறு: பெருநகர சென்னை மாநகரில் உள்ள வடக்கு வட்டாரத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதி, மத்திய சென்னை வட்டாரத்தில் உள்ள அசோக்நகர் 11-வது அவென்யூ, தெற்கு வட்டாரத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லூரி மற்றும் டைடல் பார்க் இடையே பறக்கும் ரெயில் பாதைக்கு கீழே, தலா ஒன்று வீதம் அம்மா வாரச்சந்தை அமைக்கப்பட இருக்கிறது.

இந்த வாரச்சந்தை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தை அமைப்பதற்காக நுகர்வோர், உற்பத்தியாளர், ஒருங்கிணைப்பாளரான பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோர்களின் அனுபவங்களின் அடிப்படையில் சாதக, பாதகங்களை பரிசீலிக்கப்படும். பின்னர் பொதுமக்களின் அளிக்கும் வரவேற்பினையடுத்து, அரும்பாக்கம் பசுமை தீர்ப்பாயம் அருகில், தங்கசாலை மேம்பாலம் கீழே, வளசரவாக்கம் ஆவின் பாலகம் அருகில், சேத்துப்பட்டு பழைய தார்க்கலவை வளாகம், பொதுமக்கள் கூடும் மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் ஏதேனும் 4 இடங்களில் அம்மா வாரச்சந்தை விரிவுபடுத்தப்படும்.

இந்த வாரச்சந்தைக்கு துறைவாரியாக ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து, அவர்களின் பெயர், விலாசம், செல்போன் எண், மின்னஞ்சல் போன்றவற்றை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் வார்ச்சந்தைக்கு பொருட்களை கொண்டு வரும்போது அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர் அடையாள அட்டை வழங்கவேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தங்கள் மாவட்டங்களில் தயாரிக்கப்படும் சிறப்பு பொருட்களை கொண்டு வர முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 100 சதுர அடி வீதம் கடை அமைத்து தரப்படும். மாவட்டத்தில் அனைத்து துறைகளை சார்ந்த கூட்டத்தை கூட்டி அடுத்த வாரத்திற்கு எந்த பொருளை எவ்வளவு எடையில் கொண்டு செல்லவேண்டும் என்பதனை அம்மா வாரச்சந்தை ஒருங்கிணைப்பாளருக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

வாரச்சந்தை தொடர்பாக பொதுமக்களும், மற்ற அலுவலகங்களும் தொடர்பு கொள்ள தனியாக ஒரு தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் ஒரு அலுவலரை நியமித்து அதன் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவிப்பு செய்திட வேண்டும்.

இந்த வாரச்சந்தைக்கு தேவையான இடம், கூடாரம், மின்சாரம், மின்விசிறி, விளக்கு, மேஜை, நாற்காலி, அலமாரி, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிட வசதி, மருத்துவ வசதிகளும், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்புத்துறையின் வாகனம் போன்றவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி இலவசமாக வழங்கும்.

வாரச்சந்தையில் பொருட்களின் விலையை தயாரிப்பாளர், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரே நேரடியாக தீர்மானித்து கொள்ளவும், இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைவம் மற்றும் அசைவ பொருட்கள் விற்பதற்கு தனித்தனி இடஒதுக்கீடு செய்யப்படும். இங்கு பெரிய அளவில் மக்கள் கூடுவதால் உணவு, குளிர்பானம், டீ மற்றும் காபி போன்றவைகளுக்கு தனியாகவும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்ட தனி இடவசதியும் ஏற்படுத்தப்படும்.

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களை கவரும் வண்ணமும், மகிழ்விக்கும் வகையிலும் கலைஞர்களின் திறமையை வெளிஉலகத்திற்கு எடுத்துக்காட்டி அவர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்பை அளிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மூலம் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வாரச்சந்தையில் வினியோகிக்கும் பொருட்களை துறை மூலமாகவும், மாவட்டம் மூலமாகவும், வங்கிகள் மூலமாகவும், ஏற்றுமதியாளர்கள் மூலமாகவும் அனுப்ப இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடத்திற்கும், ஒவ்வொரு அமைப்பிற்கும் முதல் மூன்று இடங்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.5,000, ரூ.25,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அம்மா வாரச்சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் மீதம் இருந்தாலோ அல்லது தேங்கினாலோ, அதனை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர், தயாரிப்பாளர் தங்கள் பொறுப்பிலேயே அடுத்த சந்தைக்கு கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வழிக்காட்டுதல் மற்றும் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+