மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி அதிக மழை பெய்துள்ளது: சேலம் கலெக்டரின் புல்லரிக்கும் பேச்சு
சேலம்: நலத்திட்ட உதவியோ... நிவாரணப்பணியோ எது என்றாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆணைப்படி என்று ஆரம்பிப்பதுதான் அமைச்சர்கள், அதிமுகவினரின் பேச்சாக இருக்கும். ஆனால் மழையே அம்மா ஆணைப்படி அதிகமாக பெய்தது என்று மாவட்ட ஆட்சியர் சம்பத் கூறி அதிமுகவினரையே அதிரவைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் ஏற்காடு மலைப்பாதை உள்பட பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. சேலத்தில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களுக்கு முன்னர் சேலம் மூக்கனேரியை பார்வையிட சென்றார். அமைச்சருடன் சேலம் ஆட்சியர் சம்பத் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகள் குறித்து ஆட்சியர் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அட்ரா சக்க கலெக்டர்
அப்போது அவர், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் உத்தரவுப்படி மழை நீர் அதிகமாக பெய்துள்ளது எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து 86 மில்லி மீட்டர் அதிகமாக பெய்திருப்பதாகவும், முதலமைச்சர் உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி அங்கிருந்த அமைச்சர், எம்எல்ஏக்களையும் அசரவைத்தார்.
|
அம்மா ஆணைப்படி மழை
மழையே முதல்வர் உத்தரவால் தான் பெய்தது என்பது போல் ஒரு மாவட்ட ஆட்சியரே பேசியதை அங்கிருந்த வேறு சிலரும் வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் முதல்வரை புகழந்து பேசி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
வடிய வச்சிருங்க கலெக்டர்
கலெக்டரின் இந்த பேட்டியை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். அம்மா உத்தரவுப்படியே வெள்ளநீரை வடிய வச்சிருங்க என்றும் கேட்டுள்ளனர்.
சர்ச்சை சம்பத்
ஆட்சியர் சம்பத் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல... கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் சம்பத் வழங்கினார். இவர் வழங்கிய அனைத்து அரசு சான்றிதழ்களின் பின்னணியிலும் திருப்பதி ஏழுமலையான் படத்தை அச்சிட்டு அதற்குமேல் சான்றிதழ் பெறும் அதிகாரிகள் பெயர் மற்றும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது சர்ச்சையை கிளப்பியது. இப்போது அம்மா ஆணைப்படி மழை பெய்துள்ளது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.