"சின்னம்மா" சிறைக்குப் போனதும் ஜெ. சமாதியில் பாட்டு நின்னு போச்சே.. தொண்டர்கள் ஷாக்!
அதிமுகவில் அதிகாரச் சண்டை உச்சத்தில நடந்து வருவதால் அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரது சமாதியில் பாடப்படும் வானமே இடிந்தது பாட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டிருந்த 'வானமே இடிந்தது அம்மா' என்ற பாடல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். 6ம் தேதி அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து, அவரது சமாதியில் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வந்தது. மேலும், அங்கு வானமே 'இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா' என்று பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அதிமுகவினர் மரியாதை
ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்து தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து மொட்டை அடித்துக் கொண்டனர். மலர் தூவி தங்களது தலைவருக்கு மரியாதை செய்தனர்.
மலர் அலங்காரம்
ஜெயலலிதா சமாதியை பார்க்க வரும் அனைவருக்கும் தொடக்கத்தில் நீர், மோர், உணவு உள்ளிட்டவைகளை அதிமுகவினர் வழங்கினர். பின்னர், தினமும் மலர் தூவி ஜெயலலிதாவின் சமாதி அலங்கரித்தனர். ‘வானமே இடிந்து விழுந்ததம்மா' என்ற பாடலும் தினந்தோறும் அங்கு ஒலித்து வந்தது. இவை அனைத்தும் அதிமுக சார்பில் செய்யப்பட்டு வந்தது.
பராமரிப்பு நிறுத்தம்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜெயலலிதா சமாதியில் எந்த பராமரிப்பும் நடைபெறவில்லை. நேற்று ஜெயலலிதா சமாதியில் காய்ந்த பூக்களே காணப்பட்டன. தொண்டர்கள் கொண்டு வரும் பூக்கள் மட்டுமே சமாதியில் தூவப்பட்டது.
‘அம்மா’ பாடலும் நிறுத்தம்
மேலும், ஜெயலலிதா சமாதியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘வானமே இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா' என்ற பாடலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தினமும் சமாதிக்கு வந்து செல்லும் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.