For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா மீண்டு வருவார்... நம்பிக்கையோடு காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : அம்மா மீண்டு எழுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது முகத்தைப் பார்க்காமல் போகமாட்டோம் என்று இரவு பகலாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர் சில அதிமுக தொண்டர்கள். இதில் மாற்றுத்திறனாளி மணிவண்ணன் என்பவரும், ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ என்பவரும் அடக்கம்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்றின் பாதிப்புகள் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது. முதல்வரை சந்திக்க அமைச்சர்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது.

Amma will come again says ADMK workers.

அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடி, அவர் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை மருத்துவமனை வாசலில் காத்திருந்தாலும் இரவு நேரங்களில் அவரவர் தங்களின் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இரவு நேரத்திலும் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கின்றனர். இவர்களில் விழுப்புரம் சின்னச் சேலம் தாலுகாவைச் சேர்ந்த கே.மணிவண்ணன், மற்றவர் ஆட்டோ ஓட்டுநரான இளங்கோ.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டதும், மணிவண்ணன் சென்னை வந்திருக்கிறார். முதல்வர் குணமடைந்ததும் அவரை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனை நுழைவு வாயில் அருகில் இருக்கும் சாலை ஓரம் தங்கியிருக்கிறார்.

இளங்கலை ஆங்கில இலக்கியமும், பி.எட் படிப்பும் படித்ததாகச் சொல்லும் மணிவண்ணன் அம்மா நலத்திட்டங்களினால் பயனடைந்தவர்.
இளம்பருவத்தில் ஏற்பட்ட போலியோ தொற்று காரணமாக எண்பது சதவிகிதம் உடல் ஊனமுற்றவர். சென்னை வந்த நாள் முதல் சாலையோரங்களில் தங்கி அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு, ஜெயலலிதாவைக் காண இரவு பகலாக காத்திருக்கிறார்.

முதல்வரைக் காண அவ்வப்போது விழாக்களில் பங்கேற்க நான் சென்னை வந்திருக்கிறேன். சென்னைக்கு வருபவர்களுக்கு மக்கள் அன்பும், மரியாதையும் அளிக்கிறார்கள். நானே இதை அனுபவித்திருக்கிறேன் என்று கூறும் மணிவண்ணன், அம்மா விரைவில் வருவார். அவர் முகத்தைப் பார்த்த பின்னர்தான் ஊர் திரும்புவேன் என்று கூறுகிறார்.

போயஸ் கார்டனை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் முதல் மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறார். சங்கரன்கோவிலில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, இளங்கோ ஆர்.கே.நகர் டீக்கடைகளில் வேலை செய்திருக்கிறார்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பல ஆயிரம் ஏழை மக்களோடு சேர்த்து முதல்வர் ஜெயலலிதா இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அம்மாக்கு அதிக கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்கிறார் இளங்கோ.

இவர்கள் கட்சியில் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. ஜெயலலிதாவின் முகத்தை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசை. இதுபோன்ற உண்மையான தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவாவது ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று எழ வேண்டும்.

English summary
Amma has faith in God. Thousands pray for her. She will come again says ADMK workers. Manivannan and Elango are waiting for outside apollo hospital for Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X