லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? டிடிவி தினகரன் விளக்கம் இதுதான்!
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், மக்கள் விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், மக்கள் விரும்பும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் இன்னொரு முக்கிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறது.
அமமுக இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்த கேள்விகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
அவர் தனது பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. இப்போது கூட்டணி குறித்து யோசிக்கவில்லை.
ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டாரகள். அதனால் கண்டிப்பாக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. நாங்கள் பாமகவிற்கு எதிரான கட்சி. பாமகவுக்கு எந்த நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தேமுதிகவுக்கும் தான்.
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.
தமிழக மக்கள் சிறு சொல்லால் கூட விமர்சித்திராத ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் தெரிவிப்போம். ஆனால் இப்போது யாரிடமும் நாங்கள் பேசவில்லை, என்று டிடிவி தினகரன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.