நெல்லையில் பெண் மீது ஆசிட் வீசிய ஆட்டோ டிரைவர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே களக்காட்டில் பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டார். ராமலட்சுமி,25 என்பவர் மீது ஆசிட் வீசிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு கைது செய்யப்பட்டார். ஆசிட் வீச்சில் படுகாயமாடைந்த ராமலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ராமலட்சுமி, அங்குள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு முன்பு சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
ராமலட்சுமிக்கு இதுவரை குழந்தை பிறக்காத நிலையில், மீண்டும் சின்னராசுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ராமலட்சுமியிடம் செல்போனில் பேசி அவரை வரவழைத்திருக்கிறார் சின்னராசு. பின்னர் ராமலட்சுமியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு களக்காடு சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சின்னராஜ் தான் மறைத்து வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டதால் ராமலட்சுமி அலறித் துடித்தார். அவரது அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ராமலட்சுமியை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் 60 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ராமலட்சுமியிடம் நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் வாக்குமூலம் பெற்றார். தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராஜூவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.