தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஐடி ஊழியரின் திறந்த மடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஐடி ஊழியர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம், தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, வாட்ஸ்அப்பில் சுற்றி வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய ராஜேஷ் லகானி சார், நான் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறேன். "தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம்" என்று தமிழ்நாடு எங்கும் 1.7கோடி பேரை நீங்கள் உறுதி மொழி எடுக்க வைத்ததாக செய்தியில் பார்த்தேன். நல்ல விஷயம். சார், இன்னும் சில விஷயங்களிலும் சில நபர்களை உறுதிமொழி எடுக்க வைக்க நீங்கள் ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

An IT firm employee writes open letter to TN election commission

நான் வேலை செய்யும் கம்பெனியிலும் சரி,எனது நண்பர்கள் வேலை செய்யும் இன்னும் பல கம்பெனிகளிலும் சரி, எப்போது வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தோடேயே இருக்கிறோம்.என்னுடைய அண்ணன் வேலை செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறது, ஆனால், அது போன்று எங்களுக்காக ஒரு யூனியன் அமைத்துக் கொள்வதற்கு ஐ.டி கம்பெனிகள் தடை போடுகின்றன.

எங்களை திடீரென்று வேலையை விட்டு தூக்க மாட்டோம் என்றும்,யூனியன் வைப்பதற்கான எங்களது ஜனநாயக உரிமையில் தலையிட மாட்டோம் என்று ஐ.டி கம்பெனி முதலாளிகளை உறுதி மொழி எடுக்க வைக்க உங்களால் முடியுமா,சார்?

அடுத்ததாக, ஏரி, குளம், ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருக்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், தனியார் இன்ஜினியரிங் காலேஜ்கள் ஆகியோரை அவற்றை காலி செய்து கொடுத்து விடுவதாக உறுதி மொழி எடுக்க வைப்பீங்களா?

சென்ற டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் என்னுடைய பைக் முழுகிப் போய் ரிப்பேர் ஆகி விட்டது. 12,000ரூபாய் செலவழித்த பிறகும் இன்னும் சரியாகவில்லை. மழை வெள்ளம் சூழ்ந்த 3-4நாட்களில் கரண்ட், சரியான சாப்பாடு, மொபைல் கனெக்சன் கூட இல்லாமல் அவதிப்பட்டோம். இன்னொரு முறை இது போல கனமழை பெய்தால் என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது. தேர்தலில் 100%வாக்களித்தால் இந்த நிலைமை மாறி விடும் என்று நீங்க உத்தரவாதம் கொடுக்க முடியுமா, சார்?

தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டன என்று படித்தேன். மேலும், 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை திருப்பிக் கட்டாத மல்லையா நாட்டை விட்டே ஓடிப் போய் விட்டார். அதை அரசாங்கமோ, சி.பி.ஐ-யோ, உச்சநீதிமன்றமோ கூட தடுக்க முடியவில்லை.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அவரை விடுவித்து விட்டார்கள். நான் உங்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், எல்லா கலெக்டர்களும், மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், போலீசும் ஊழலை செய்வதை நிறுத்தி விட்டு, ஊழல் செய்பவர்களை தண்டிப்போம் என்று உறுதி எடுக்க வைப்பீர்களா? அப்படி எதுவும் நடக்காத போது நாங்கள் ஓட்டு போட்டு என்ன ஆகி விடப் போகிறது?

நான் 4 வருடங்களுக்கும் மேலாக ஐ.டி துறையில் வேலை செய்கிறேன். சமூகத்தில்90% மக்களை விட எனக்கு அதிக வருமானம் வருகிறது. இருந்தும், நான் 1 கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனால்,தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? அவர்களிடம் அது பற்றி விசாரிப்பதற்கு பதிலாக, ஓட்டுப் போட பணம் வாங்காதீர்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்வதில் என்ன பலன்?

அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஆரம்பித்து எல்லா அரசியல் வாதிகளையும் ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வையுங்கள். மேலும்,அவர்களை கைது செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்து சிறையில் அடையுங்கள். ஆனால், இந்தத் தலைவர்களை பிடிப்பதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, உங்கள் தலைமையிலான தேர்தல் கமிஷன் அவர்களில் ஒருவருக்கே வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும்படி பல நூறு கோடி ரூபாய் செலவில் பிரச்சாரம் செய்து வருகிறது.

நான் உண்மையிலேயே குழம்பித்தான் போயிருக்கிறேன். இன்னும், எதிர்காலத்தை நினைத்தால் கலக்கமாக உள்ளது. நான் சொன்ன விஷயங்கள் குறித்து உங்களிடமிருந்து ஒரு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன். உங்கள் நேர்மையுள்ள, ஒரு சராசரி ஐ.டி துறை ஊழியன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+