பழைய ரூபாய் நோட்டு செல்லாது என அறியாத வேலூர் மூதாட்டி.. ரூ.8000 பணத்தோடு கண்ணீர்
வேலூர்: ரூ.8,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றித் தருமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு வங்கிக்கும், வீட்டுக்கும் நடையாய் நடந்தனர்.
பின்னர் ஏடிஎம் மையங்களிலும், வங்கிகளிலும் பணம் எடுப்பதற்கு ஆர்பிஐ கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதை தொடர்ந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், கள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள் என்ற மூதாட்டி பல ஆண்டுகளாக கீரை வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம் இவர் ரூ. 8 ஆயிரம் சேமித்து வைத்துள்ளார்.
படிப்பறிவு இல்லாததாலும் அவருக்கென உறவினர்கள் யாரும் இல்லாததாலும் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு அந்த மூதாட்டிக்கு தெரியவில்லை.
இந்நிலையில் தன்னிடம் இருந்த பழைய ரூ.500 நோட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட சென்றார் மூதாட்டி. அப்போதுதான் தான் வைத்திருந்த நோட்டுகள் செல்லாதவை என்று அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தனக்கு அறிமுகமானவர்களிடம் மூதாட்டி கேட்டபோது வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது என்று தெரிவித்தனர். இதனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தான் வைத்துள்ள ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்றித் தருமாறு அந்த மூதாட்டி கண்ணீருடன் மனு அளித்தார்.