மதுரையில் பயங்கரம்.. தனியாக இருந்த 85 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. நகை மாயம்!
நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மதுரை : வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசரடி ஆர்விநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு 3 பெண் பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரை கவனித்து கொள்ள ஒரு பெண் வேலைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். மாரியம்மாளுக்கு உணவு கொடுத்து பராமரிப்பதுதான் அவரது வேலை.

இந்நிலையில், இன்று மாரியம்மாளுக்கு தேவையான சமைத்து கொடுத்துவிட்டு அந்த பெண்ணும் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் பக்கத்து வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் மாரியம்மாளிடம் குடை கேட்கலாம் என்று கதவை தட்டினார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர் கதவை பலமாக தள்ளி உள்ளே வந்து பார்த்தார். அப்போது மாரியம்மாள் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக கரிமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போது மாரியம்மாள் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் மாரியம்மாள் நகைக்காகத்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் தனியாகவும், ஆதரவற்றும் கிடக்கும் முதியோர்களை காக்க கோவையில் துவங்கியுள்ள 'ஹலோ திட்டம்' சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தினை மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காவல்துறை செயல்படுத்தினால் நம் பாட்டிகள் பலரது உயிர் காப்பாற்றப்படுவது உறுதி.












Click it and Unblock the Notifications