இப்படி ஒரு மாநாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை.. அன்பழகன் நெகிழ்ச்சி
திருச்சி: நானும் இதுவரை தி.க தொடங்கியது முதல் 40 மாநில மாநாடுகளை பார்த்து விட்டேன். ஆனால் இப்படி ஒரு மாநாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன்.
திருச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கிய திமுக மாநில மாநாட்டில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் நேற்று பேசினர். குஷ்பு பேசினார், ஆற்காடு வீராசாமி பேசினார்.
இறுதியாக அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சில் நெகிழ்ச்சி அதிகம் காணப்பட்டது.
அன்பழகன் பேச்சிலிருந்து...
இப்படி ஒரு மாநாட்டைப் பார்த்ததில்லை
1943-ம் ஆண்டிலிருந்து திராவிடர் கழகம் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன். இதுவரையில் இதுபோன்ற மாநாட்டை வாழ்நாளில் பார்க்கவில்லை.
உணர்வு வேண்டும்
இளைஞர்களுக்கு அந்த உணர்வு வேண்டும். நாம் அரசியல் கட்சி மட்டுமல்ல. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் நமக்கு என்பது அரசியல் வெற்றிக்காக மட்டுமல்ல. இந்த இனத்தைக் காப்பாற்றவும்தான்.
தூக்கி நிறுத்தும் கருணாநிதியின் எழுத்துக்கள்
கருணாநிதியின் எழுத்துகள் அனைத்தும் அண்ணா வழியில் நம் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
தமிழ் நமக்குத் தந்தது நிறைய
திருக்குறள், தொல் காப்பியம் தந்தது தமிழ் மொழி. தமிழ்மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. தமிழ் மொழியை நாம் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை என்பதை உணர வேண்டும்.
கலாச்சாரத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்
உலகத்தவர்கள் பாராட்டத்தக்கதாக இருந்தது தமிழினம். நம் கலாச்சாரம் சிறப்பானது. அதை சிலர் திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள். பெரியார் இல்லையெனில் நம் இனம் இந்த முன்னேற்றத்தைக் கூட அடைந்திருக்காது.
கருணாநிதியின் மடல் படியுங்கள்
அண்ணாவின் எழுத்துகள், கருணாநிதியின் மடல்களைப் படிக்க வேண்டும். அறிவால் தான் உயர முடியும் என்பதை உணர வேண்டும் என்றார் அன்பழகன்.