புயலில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி: அன்புமணி பாராட்டு
புயலில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களும், சாய்ந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகத்தை தொடங்கும் நடவடிக்கைகளில் மின்வாரிய தொழிலாளர்களும் ஈடுபட்டிருகின்றனர். கடுமையான நெருக்கடியிலும் அவர்கள் மேற்கொண்டு வரும் பணி பாராட்டத்தக்கதாகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையை 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய புயல் மிகவும் மோசமான பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. வார்தா புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுந்து வரும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், சேதங்களில் இருந்து மீள இன்னும் அதிக காலம் ஆகும்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழக அரசும், உள்ளாட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்புகளும் இம்முறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இது பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், பெரும்பாலான இடங்களில் 120 கி.மீ. வேகத்திலும், சில இடங்களில் 182 கி.மீ. வேகத்திலும் தாக்கிய புயலால் சென்னை மாநகரமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் சாலை, தொடர்வண்டி, விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முற்றிலுமாக முடங்கின. பெருநகர தொடர்வண்டி சேவை மட்டும் தான் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவியாக இருந்தது. சென்னையில் 4000-க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3500-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல பகுதிகளில் சரக்குப் பெட்டகங்கள் (கண்டெய்னர்கள்), மகிழுந்துகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே புயலின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும். புயலின் பாதிப்பு காரணமாக சென்னையில் பல பகுதிகளில் இன்னும் போக்குவரத்து சீரடையவில்லை.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேற்றிரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்திருந்த நிலையில், சென்னையில் 80% பகுதிகளில் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 50% பகுதிகளில் மரங்கள் அகற்றப்படாததால் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. மக்களின் அடிப்படைத் தேவையான பால் கிடைக்காததால் பல இடங்களில் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்; குழந்தைகளுக்குக் கூட உணவு வழங்க முடியவில்லை.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. குளிரில் வாடும் அவர்களுக்கு போர்வை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இக்குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.
புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களும், சாய்ந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகத்தை தொடங்கும் நடவடிக்கைகளில் மின்வாரிய தொழிலாளர்களும் ஈடுபட்டிருகின்றனர். கடுமையான நெருக்கடியிலும் அவர்கள் மேற்கொண்டு வரும் பணி பாராட்டத்தக்கதாகும். இதற்காக அவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில் வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் மின்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமானது அல்ல. கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை தானே புயல் தாக்கிய போது பிற வடக்கு மாவட்டங்களில் இருந்தும், காவிரி பாசன மாவட்டங்களில் இருந்தும் உள்ளாட்சி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல், இப்போதும் பிற மாவட்ட பணியாளர்களை வரவழைத்து நிவாரணப் பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும்.
வார்தா புயலுக்கு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புயலால் சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்றவகையிலும் இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தேவையான உதவிகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் வழங்க வேண்டும். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மின் வாரியம் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications