தர்மபுரியில் அன்புமணி போட்டி - முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்
சென்னை: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
இதுகுறித்து அவர் கூறுகையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ம.க. அறிவித்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றார் மணி.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தர்மபுரிக்கு அன்புமணியை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வந்தது முதல் இதுவரை மக்களைச் சந்தித்து நேரடியாக தேர்தலில் நின்றதே இல்லை. ராஜ்யசபா மூலமாகத்தான் அவர் நாடாளுமன்றம் போயுள்ளார்.இப்போதுதான் முதல் முறையாக தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.