அன்புமணி முதல்வராக ராஜ மாதங்கி யாகம்... குறும்படத்திலும் ஹீரோ ஆனார்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரது தந்தையான டாக்டர் ரொம்பவே மெனக்கெடுகிறார். தை அமாவாசை நாளான நேற்று சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் 9 மணிநேரம் மகா ராஜ மாதங்கி யாகம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்த போது அன்புமணி செய்த சாதனைகளை விளக்கி குறும்படம் தயாரித்துள்ளனராம். இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளாராம் அன்புமணி.
அதிமுக, திமுக உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 2014ம் ஆண்டே சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது. மண்டல மாநாடுகள் நடத்தி மாஸ் காட்டியதோடு, போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி, மாதிரி தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தது.
பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து 234 தொகுதிகளுக்கும் விருப்பமனுவை வாங்கிய கையோடு, தைலாபுரம் தோட்டத்தில் நேர்காணலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ராஜமாதங்கி யாகத்தை நடத்தியிருக்கின்றனர் பாமகவினர்.

தை அமாவாசையில் யாகம்
மேச்சேரி திரௌபதியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ராஜ மாதங்கி சிறப்பு யாகத்திற்கு கண்ணன் பட்டாச்சாரியார் தலைமை வகித்தார். இந்த யாகத்தில் வாழை, மாதுளை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட பழ வகைகளும், பட்டு ஆடைகளும் போடப்பட்டன. சிவாச்சாரியார் திருஞானசம்பந்தர், உமாபதிகுருசாமி ஆகியோர் பூஜையை நடத்தி வைத்தனர்.

9 மணிநேரம் யாகம்
காலை 8 மணிக்குத் தொடங்கிய வேள்வி பூஜை மாலை 4 மணி வரை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

108 திரௌபதி அம்மனுக்கு யாகம்
அன்புமணி முதல்வராக வேண்டி மாநிலம் முழுவதும், 108 திரவுபதி அம்மன் கோவில்களில், ராஜ மாதங்கி மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தை அமாவாசை நாளில், மேச்சேரி திரவுபதி அம்மன் கோவிலில் முதல் ராஜ மாதங்கி மகா யாகம் நடத்தப்பட்டுள்ளது. வரும் அமாவாசைக்கு இதர திரவுபதி அம்மன் கோவில்களில் யாகம் நடக்கும் என்கின்றனர் பாமகவினர்.

தேர்தலில் வெற்றி
ராஜமாதங்கி சிறப்பு யாகம் நடத்தினால் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என ஜோதிடர்கள் சொன்னதை நம்பி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாக பாமக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சார குறும்படம்
ஒரு பக்கம் யாகம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் மக்களை சந்திக்க குறும்படம் ஒன்றையும் தயாரித்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சார குழு
பென்னாகரம் தொகுதியில், அன்புமணி போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது மனைவி சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

100 தொகுதிகளில் வெற்றி உறுதியாம்
வட மாவட்டங்களில், வன்னியர்கள் கூடுதலாக உள்ள, 100 சட்டசபை தொகுதிகளில், பா.ம.க., கட்டாயம் வெற்றி பெறும்' எனக்கூறி, அன்புமணி பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அன்புமணி ஹீரோ
இந்தப் படத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக, அன்புமணி பதவி வகித்தபோது, அமலுக்கு வந்த மக்கள் நல்வாழ்வு திட்டங்கள், அவரின் சாதனைகள் குறித்த காட்சிகள் இடம் பெறுகின்றன. அன்புமணியின் செயல்பாடுகளை, ஐ.நா., சபை பாராட்டியது போன்றவை, காட்சிகளாக குறும்படத்தில் இடம் பெறுகின்றன. படத்தில், அன்புமணி, 'ஹீரோ'வாக நடித்துள்ளார்.

தங்கர்பச்சன் உதவியாளர் இயக்கம்
பா.ம.க., கொள்கைகளை விளக்கும் வகையில், இரு பாடல்களும், குறும்படத்தில் இடம் பெற்றுள்ளதாம். வன்னியர்கள் பெரும்பாலானோர் வசிக்கும் வட மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில், படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்தல் பிரசார குறும்படத்தை, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சானின் உதவியாளர் ராஜேந்திரன் இயக்குகிறார்.












Click it and Unblock the Notifications