'காதல் தோல்வியால்' தர்மபுரியில் வென்ற அன்புமணி!
சென்னை: திவ்யா- இளவரசன் காதல் விவகாரமே தர்மபுரியில் அன்புமணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தர்மபுரியில் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 77 ஆயிரத்து 146 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அன்புமணி மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் 3 லட்சத்து 91 ஆயிரத்து 048 ஓட்டுகளும், தி.மு.க.,வேட்பாளர் தாமரைச்செல்வம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 297 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராமசுகந்தன் 15 ஆயிரத்து 455 ஓட்டுகளும் பெற்றனர்.

திவ்யா இளவரசன்
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனுக்கும், அருகில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவுக்கும் இடையே சாதியைக் கடந்த காதல். இதனால் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, காதலை ஏற்றுக் கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

சாதீய வன்முறை
இதை ஒரு காரணமாக்கி வன்முறையை கையில் எடுத்தது சாதிய ஆதரவு அமைப்புகள். அப்பாவி மக்களின் வீடுகளை சூறையாடின. கூரையுடன் பணமும், பண்டபாத்திரங்களும் பற்றி எரிந்த ‘தீ'க்கு இரையாகின. 268 பேர் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். அரசியலும் இவர்கள் காதலுக்குள் புகுந்து கொண்டதால் காதல் ஜோடிக்கு மட்டுமல்ல, காதலர் குடும்பத்துக்கும் நெருக்கடி முற்றியது. மொத்த விவகாரமும் இரு ஜாதியினருக்கு இடையிலான பிரச்சனையாக மாறியது. இரு தரப்புக்கும் இரு வேறு கட்சிகள் ஆதரவு தந்ததால், மக்கள் அணி பிரிந்து நின்றன.

பிரிந்த திவ்யா
சாதீய நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் ஏற்படவே இளவரசனை விட்டுப் பிரிந்தார் திவ்யா. ஹைகோர்ட்டில் ஆஜராகி, இளவரசனுடன் இனி நான் வாழ விரும்பவில்லை என்று வெளிப்படையாக திவ்யா அறிவித்தார்.

மரணித்த இளவரசன்
உயிருக்குயிராக காதலித்த பெண் சரியாக 10 மாதம் ஆவதற்குள்ளாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என்ற சோகத்தில் இருந்த இளவரசன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி தேதி ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஆரத்தி எடுத்த திவ்யாவின் தாயார்
இந்த காதல் விவராகமும், தற்கொலையும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே பாமகவிற்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. எனவேதான் தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ்க்கு தொகுதியில் நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது. திவ்யாவின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து அன்புமணியை வரவேற்றனர்.

ராமதாஸ் பிரசாரம்
எந்த தொகுதிக்கும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸ், கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று தன் இனத்தைச் சார்ந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கைகொடுத்த ஜாதி பாசம்
இந்த பாசம் அன்புமணியை விட்டுவிடவில்லை. அனைத்தும் வாக்குகளாக மாறி அன்புமணியை வெற்றி பெறச் செய்துள்ளது என்றே கூறலாம். ஒரு காதல் தோல்வி மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications