பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் அன்புமணி?
சென்னை: பாமக உருவானது முதல் இதுவரை ஒருமுறை கூட சட்டசபைத் தேர்தலிலோ அல்லது லோக்சபா தேர்தலிலோ போட்டியிட்டிராத டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகிற லோக்சபா தேர்தலில் முதல் முறையாக போட்டியிடவுள்ளார்.
அவரை தர்மபுரி தொகுதி வேட்பாளராக பரிந்துரைத்து கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர்.
அவருடன் சேர்த்து மொத்தம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தனித்துப் போட்டியிடும் பாமக
இதுவரை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வந்த பாமக வரும் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஒரு வேளை பாஜகவுடன்...
ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டணியை பாமக அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அனேகமாக அது பாஜகவுடன் கூட்டணி சேரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் அதை பாமக தலைமை மறுத்து வருகிறது.

15 தொகுதிகளுக்குக் குறி
தற்போது 15 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் போட்டியிடு்ம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ரகசியமாக பாமக ஈடுபட்டுள்ளதாம்.

தொகுதிக்கு 5 வேட்பாளர்கள் பெயர்
ஒவ்வொரு தொகுதியிலும்வெற்றி வாய்ப்புள்ள 5 பேரின் பெயர்களை கட்சித் தலைமைக்கு தொகுதி பாமக பொறுப்பாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதிலிருந்து வேட்பாளரை இறுதி செய்து வருகிறதாம் பாமக தலைமை.

தர்மபுரியில் அன்புமணி
அதன் அடிப்படையில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் பெயரை இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இது உண்மையாக இருந்தால் அன்புமணி போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாக அமையும். இதுவரை அவர் ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். மக்களை இப்போதுதான் முதல் முறையாக அவர் தேர்தல் மூலம் சந்திக்கப் போகிறார்.

கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி
பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஏ.கே.மூர்த்தி ஆரணி தொகுதியிலும், சேலம் அருள் அத்தொகுதியிலும் போட்டியிடுவார்களாம்.
விரைவிலேயே வேட்பாளர்களை முடிவு செய்து அவர்களின் பெயர்களையும் அறிவித்து முதல் ஆளாக பாமக தனது பிரசாரத்தையும் தொடங்கி விடும் என்றும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications