வருடா வருடம் சாக்கடையில்தான் இறங்குகிறார் அழகர்.. அன்புமணி ராமதாஸ் வேதனை
மதுரை: வைகை ஆறு மதுரையின் கூவமாகி விட்டது. வருடா வருடம் சாக்கடையில்தான் கள்ளழகர் இறங்கி வருகிறார் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வள்ளல் நதியாம் வைகையை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு சுற்றுப் பயணத்தை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

2-வது நாளான இன்று முதலாவதாக மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைகை ஆற்று பகுதிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து வைகையை காப்போம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மூல வைகை நதி தோன்றும் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு காப்போம் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினேன். வைகையை மதுரை மக்கள், மதுரையின் கூவம் என கூறுகின்றனர். கூவம் நதியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குடிக்க தண்ணீர் பிடித்து சென்றனர். ஆனால் இன்று கழிவு நீர் கால்வாயாக மாறி விட்டது. வைகையும் அந்த நிலையை அடைந்து விடும்.
சோழவந்தான் வரை வைகை ஆறு பரவாயில்லை. மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வைகை ஆற்றில் சுத்திகரிக்பப்படாத மருத்துவ கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. அரசு மருத்துவமனை கழிவு நீரும் கலக்கிறது. 200 தொழில் நிறுவனங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வைகையில் கலக்கிறது. 58 இடங்களில் திடக்கழிவு கலக்கிறது.
அழகர் சாக்கடையில்தான் இறங்குகிறார். இது தான் வைகை ஆற்றின் இன்றையை நிலை. வைகையில் சாக்கடை தான் உள்ளது. மணல் இல்லை. இதற்கு காரணம் யார்? அரசியல்வாதிகள் தான்.
வருசநாட்டில் மலை பகுதியில் காடுகளை அழித்து உள்ளனர். இதனால் தான் மூல வைகை நதி பகுதியில் மழை இல்லை. எனவே காடுகளை காக்க, வருசநாடு மலை பகுதியை புலிகள் சரணாலயமாக அறிக்க வேண்டும். வைகையை காக்க, விவசாயத்தை காக்க , மக்கள் விவசாயிகள் போராட தயாராக உள்ளனர். ஆறுகளை காக்க தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அன்புமணி
மற்ற கேள்விகளுக்கு அன்புமணி பதிலளிக்கையில், அரசியலில் நடிகர், வழக்கறிஞர், மருத்துவர் என யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் அவர்களை ஏற்று கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை, பாமக கடுமையாக எதிர்க்கிறது. காரணம் இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வேண்டும். அப்போது தான் ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications