தேசிய விருது பெற்ற திரைக் கலைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
டெல்லியில் 64வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை: தேசிய விருது பெற்ற வைரமுத்து உள்ளிட்ட திரைக் கலைஞர்களுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியிருக்கிறார். தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ் திரைப்படக் கலைஞர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்மதுரை திரைப்படத்திற்கு பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்து ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றிருக்கிறார். ஒரு பாடலாசிரியர் அவரது வாழ்நாளில் ஏழு முறை தேசிய விருது பெறுவது அரிதிலும் அரிதான ஒன்றாகும். செயற்கரிய அந்த சாதனையை கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார்.
சமூக விழிப்புணர்வூட்டும் கதைக்களம் கொண்ட ஜோக்கர் தமிழ் மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பாடல்களைப் பாடிய சுந்தரா ஐயர், 24 என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோரும் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளனர்.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் இனிவரும் காலங்களில் கூடுதல் திறமையை வெளிப்படுத்தி மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.