கருத்து கணிப்பு பொய்.. பென்னாகரம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன்: அன்புமணி உறுதி
சென்னை: பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற முடியாது என்று நியூஸ்-7, தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்ட நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தான், வெற்றி பெறுவது உறுதி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நியூஸ்7 சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், அன்புமணி 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று தகவல் வெளியானது.

இதை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோகூட, நம்ப மறுத்தார். எதிர்க்கட்சிகளாக தேர்தலில் களம் காணும்போதும், பென்னாகரத்தில், அன்புமணி 3வது இடத்திற்கு செல்வார் என்று கூறும் ஒரு கருத்துக்கணிப்பை தன்னால் ஏற்கவே முடியாது என்று வைகோ கூறினார்.
இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அன்புமணியிடம் இந்த கருத்து கணிப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு, அன்புமணி அளித்த பதில்:
கடந்த 50 ஆண்டுகளில் திமுக, அதிமுக தயவு இல்லாமல் ஒரு எம்பி வெற்றி பெற்றார் என்றால் அது நான்தான். அதுமட்டுமல்ல பென்னாகரம் தொகுதியில்தான் எனக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. 90 ஆயிரம் வாக்குகள் எனக்கு கிடைத்தது. 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் அதைவிட அதிக வாக்குகளை மக்கள் எனக்கு தருவார்கள்.
நடப்பது, கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. அது மக்களின் உண்மையான பிரதிபலிப்பு கிடையாது. நாங்கள் மக்களை நேரில் சந்திக்கிறோம். லட்சக்கணக்கான இளைஞர்கள் எங்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள். மற்றக் கூட்டங்களில் இளைஞர்கள் கிடையாது. பெண்கள் கிடையாது. அந்த அளவுக்கு பெரிய ஆதரவை எங்களுக்கு கொடுக்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு இனி வாய்ப்பு கொடுக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அன்புமணிதான் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications