"முதலில் கருணாநிதியிடம் ஸ்டாலின் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும்"
காஞ்சிபுரம்: தமிழகத்தில் மது விலக்கை முதன் முதலில் தளர்த்தியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். எனவே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்பதற்கு முன்பு இதுதொடர்பான கேள்வியை தனது தந்தையிடம்தான் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திறந்த மடல் என்ற பெயரில் ஸ்டாலின் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மது அருந்துவதில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முதன்மை மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் உருவாகி இருக்கிறது. இதுதான் உங்களுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் பெருமை தேடித் தருகிறதா?
உங்கள் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் இதுவே உங்களின் ஒரே சாதனை என்று விளம்பரம் கொடுக்கப் போகிறீர்களா? மதுவை மட்டுமே நம்பியுள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை ஆக்குவதுதான் எங்கள் ஒற்றை குறிக்கோள் என்று இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றதா? என்று கேட்டிருந்தார்.
இதுகுறித்து, மதுக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் வந்திருந்த டாக்டர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இந்த கேள்வியை ஸ்டாலின், அவரின் தந்தையிடம் தான் முதலில் கேட்க வேண்டும். 1971ல் அவரின் தந்தை தான் பூரண மதுவிலக்கை தளர்த்தினார். தமிழகத்தில் மதுவுக்கு பாதை அமைத்துக் கொடுத்தது அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் என்பது ஸ்டாலிக்கு தெரியாதா? என்று அதிரடியாக கேட்டார்.