50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாத சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்வோம் - அன்புமணி உறுதி
சென்னை: தமிழகத்தில் 50 ஆண்டுகளில் திமுக, அதிமுக செய்யாத சாதனைகளை ஆட்சிக்கு வந்தால் செய்து காட்டுவோம் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வண்டலூர் மாநாட்டில் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு வண்டலூர் விஜிபி திடலில் இன்று மாலை நடந்தது. மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழ்நாட்டிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். அன்புமணியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று இளைஞர்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

தமிழகத்தில் 50 ஆண்டு காலம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அந்த கட்சிகள் மக்கள் நலத் திட்டங்களில் தோல்வி அடைந்திருக்கின்றன. எங்களுக்கு 5 ஆண்டு காலம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள். 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை 5 ஆண்டுகளில் இந்த அன்புமணி ராமதாஸ் செய்து முடிப்பான்.
என்னை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தபோது இவரால் ஒன்றும் நடக்காது என்று ஏளனம். கிண்டல் செய்தவர்களுக்கு இப்போது பயம் வந்துவிட்டது. 32 மாவட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும், இளைஞர்களையும் சந்தித்துள்ளேன். பெண்களை திரட்டி மதுஒழிப்பு போராட்டங்களை நடத்தியுள்ளோம். 8 மண்டல மாநாடுகளை நடத்தி காட்டியுள்ளோம்.
இதுவரை தமிழகத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று கிடையாது. இப்போது மாற்று இருக்கிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுகவும், அதிமுகவும் தனித்து போட்டியிட பயந்து கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் பாமக மக்களை நம்பி களத்தில் உள்ளது. நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை திமுக. அதிமுகவை தவிர எந்த கட்சியும் பாமகவுடன் கூட்டணிக்கு வரலாம். வந்தால் மகிழ்ச்சி, வரவில்லை என்றால் மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு பதவி ஆசை கிடையாது. எனது ஆசை எல்லாம் தமிழகம் முன்னேற வேண்டும். உங்கள் வாழ்க்கை முன்னேறவேண்டும். இதுதான் என் ஆசை, கனவு எல்லாம். இந்தியாவில் 29 மாநிலங்களில் தமிழகம் 21 வது இடத்தில் உள்ளது. இது வெட்கக்கேடானது.
இந்தியாவில் அதிக மது விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதிக விதவை பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். 1 கோடியே 97 லட்சம் மக்கள் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசால் அத்தனை குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளன. 5 முறை ஆட்சியில் இருந்த கருணாநிதியால் மதுவை ஒழிக்க முடியவில்லை. இப்போது மட்டும் எப்படி மதுவை ஒழிக்க முடியும்.
திமுகவின் முன்னோடிகள் அண்ணா, பெரியார் மதுவை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். மதுவால் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்றார் அண்ணா. ஆனால் அண்ணாவை பின்பற்றிய கருணாநிதி மதுவை ஊக்குவிக்கிறார். வருமானத்திற்காக ஜெயலலிதா அரசு தமிழக மக்களிடம் மதுவை திணித்து வருகிறது.
நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவியேற்ற முதல் நாளில் நான் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்கு தொடர்பான கையெழுத்துதான். இதற்காக கோடிக்கணக்கான தாய்மார்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதம் பொறுத்திருங்கள். தமிழகத்தில் 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை 5 ஆண்டுகளில் செய்து காட்டுவோம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications