21 உயிர் போச்சே.. ஆளுநர் அன்றே செய்திருக்கனும்! ஆன்லைன் சூதாட்ட தடையால் பாமகவுக்கே வெற்றி - அன்புமணி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டசபையில் அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து இருக்கும் நிலையில், இது தாமதமான முடிவு என்றாலும் அதை வரவேற்பதாக தெரிவித்து இருக்கும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆளுனரின் முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்பதையே ஆளுநர் மீண்டும், மீண்டும் வினாவாக எழுப்பி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுனர் செய்த தாமதம் ஏற்க முடியாதது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால் அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும். மீண்டும் ஒரு சட்டம் இயற்றும் தேவையும் இருந்திருக்காது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இப்போது ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருப்பது பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி. தற்கொலைகள் இனி நிகழாது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.

நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட வாய்ப்புள்ள வழக்குகளை சட்ட வல்லுனர்களைக் கொண்டு முறியடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். திமுக அரசு கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் அந்த மசோதா காலாவதியானதுடன் 20 க்கும் மேற்பட்டோர் அதன் பின் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த மசோதாவை ஆளுநர் ரவி அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஆனால், ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் தராமல், நிலுவையில் உள்ள மசோதாக்கள் எல்லாம், நாகரிகமாக நிராகரிக்கப்பட்டவை என்றே பொருள் தரும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று காலை அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திடும் வகையில், கால நிர்ணயம் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார். இந்த நிலையில் மாலை ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications