ஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா இம்மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 5-ம் திருநாளான 26-ம் தேதி (சனிக்கிழமை) ஐந்து கருடசேவை நடைபெற்றது.
அப்போது ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகியோர் பெரிய திருவடி (கருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வர் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
7-ம் திருநாளான 28-ம் தேதி இரவு கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம்
9-ம் திருநாளான 30-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
பட்டும் பரிவட்டமும்
முன்னதாக மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோவிலிலிருந்து பிரசாதாமாக வரப்பட்ட பரிவட்டங்கள் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
திருத்தேர்
பின்னர் அதிகாலை ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று, ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தனித்தோளுக்கினியான்களில் சுவாமிகள் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் மேளத்துடன் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது.
பக்தர்கள் பரவசம்
தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், உள்ளிட்ட உயரதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகளின் வழியே வந்து இரண்டரை மணி நேரத்தில் நிலை அடைந்தது.
தேரோட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.