ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு பயணம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது.
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குதான் ஆண்டாள் அவதரித்தார் என்கின்றன புராணங்கள்.
மகாவிஷ்ணுவின் மீது கொண்ட காதலால் பெருமாளுக்கு கட்டிய மாலையை தான் சூடி மகிழ்ந்தாள். அதை பெருமாளும் ஏற்றுக் கொண்டார் என்று புராண கதைகள் கூறுகின்றன. அதுமுதல் ஆண்டாள் சூடி களைந்த மூலவராக வடபத்ரசாயிக்கு அணிவிக்கின்றனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்
ஆண்டுதோறும் திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் ஆகியவை கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

கருடசேவை தினத்தில்
தற்போது திருமலையில் பிரம்மோற்சவ விழா 4வது நாளாக நடைபெற்று வருகிறது. 5ம் நாளான கருடசேவையன்று ஆண்டாள் சூடியமாலையை அணிந்து ஏழுமலையான் காட்சி தருவார். இதற்காக, ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடைபெற்றது.

ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம்
இந்த விழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவில் வளாகம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆண்டாள் சூடுவதற்காக பிரமாண்ட மாலை தயார் செய்யப்பட்டிருந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன.

திருப்பதி புறப்பட்டது
பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

கள்ளழகருக்கு மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாத்தப்படுகிறது.

ஸ்ரீரங்கம் – திருப்பதி
ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. அதேபோல் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளன்று, காலையில் நடக்கும் கருட சேவையிலும், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும்.












Click it and Unblock the Notifications