5 தமிழர்கள் படுகொலை : கோயம்பேட்டில் ஆந்திரா அரசு பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம்- வேல்முருகன்
ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஆந்திர மாநிலப் பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இன்று மாலை கோயம்பேட்டில் ஆந்திர மாநிலப் பேருந்துகளை சிறைபிடிக்கப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கூலி வேலைக்கு சென்ற ஐந்து அப்பாவி தமிழர்களை ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக பொய்யான குற்றசாட்டை கூறி படுகொலை செய்துள்ள ஆந்திர அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆந்திர மாநில பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஆந்திராவிற்கு கூலி வேலைக்கு சென்ற ஐந்து அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையினர் அடித்து கொன்று ஏரியில் வீசியிருக்கிறார்கள்.
ஆந்திரப் போலீசால் படுகொலை கொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களுக்கும் முறையான சி.பி.ஐ விசாரணை வேண்டும்; மேலும் இந்த ஐந்து தமிழர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு பரிசோதனை செய்ய வேண்டும்; இந்த வழக்கு விசாரணையை ஆந்திரா, தமிழ்நாடு இல்லாமல் வேறொரு மாநிலத்தில் நீதி மன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக இன்று மாலை 4.00 மணிக்கு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.