சிதைத்து… சித்ரவதை செய்து சுட்டுக்கொலை… 20 தொழிலாளர்களின் உறவினர்கள் கதறல்
சென்னை: கொத்தனார் வேலைக்கும், சித்தாள் வேலைக்கும் சென்ற கூலித் தொழிலாளர்களை கைது செய்து அவர்களில் 20 பேரை செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசார், சிதைத்து சித்ரவதை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட 20 பேரின் உடல்களும் உறவினர்களிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஆந்திரா போலீசார் மீது இந்த குற்றச்சாட்டினை கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம், சேசாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இருமாநில எல்லைகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், என்கவுன்டர் சம்பவம் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

உடல்கள் ஒப்படைப்பு
இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழகத் தொழிலாளர்களின் உடல்கள் அனைத்தும் திருவள்ளூர் ஆட்சியர் வீர ராகவராவ் முன்னிலையில், இறப்பு சான்றிதழ்களோடு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை ஆந்திர போலீசார் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சொந்த ஊரில் கதறல்
ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்த ஒன்பது தொழிலாளர்களின் சடலத்தைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்களைக் கலங்கச் செய்தன.

20 உடல்களிலும் காயங்கள்
இதேபோன்று ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த 4 உடல்கள், தருமபுரியைச் சேர்ந்த 7 உடல்கள் என மொத்தம் 20 உடல்களும், ஆந்திர போலீசார் உதவியுடன் சொந்த ஊரில் ஒப்படைக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் உடல்களை பார்க்க போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், கொலை செய்வதற்கு முன்னர் அடித்து துன்புறுத்தி முகத்தின் அதிக அளவில் காயம் ஏற்படுத்தியிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கொத்தனார் வேலைக்கு
கொத்தனார் வேலைக்குத்தான் போனார்கள்,நகரிக்கு பக்கத்துலதான் கைது பண்ணாங்க... ஆனா சுட்டுக்கொன்று நடுக்காட்டில் போட்டுவிட்டனர். முதலில் எங்களுக்கு முகங்களையே காட்டவில்லை. டெத் சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னர்தான் முகங்களே பார்க்க விட்டனர். முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது என்று உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

டிஸ்மிஸ் செய்யவேண்டும்
இதனிடையே 20 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பற்றி கருத்து கூறியுள்ள இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியன், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் தப்பி ஓடினால் தடியடி நடத்தலாம்... காலில் சுடலாம்... ஆனால் குறிபார்த்து மார்பில் சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு அவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று திரு. தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பதற்றம் நீடிப்பு
என்கவுண்டர் சம்பவத்தினால் தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதிகளில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2-வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications