2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
2015-ல் வரலாறு காணாத மழை வெள்ளத்தைச் சந்தித்தது சென்னை மாநகரம். இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றால், அன்றைக்கு ஆட்சி நிர்வாகத்தின் மெத்தனம் இன்னொரு முக்கிய காரணமாகிவிட்டது.
கடும் விமர்சனங்கள். ஊடகங்களைவிட மக்களே உண்மைகளை சமூக வலைத் தளங்களில் அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் பக்காவாக ஒரு வேலைப் பார்த்தனர். அனிருத்தும் நடிகர் சிம்புவும் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடலை வெளியிட்டு மக்கள் - ஊடகங்கள் கவனத்தை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு திசைத் திருப்பினர்.

மனித நேயத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாய் மழை வெள்ளத்தில் படகில் போய் மக்களுக்கு உதவி செய்த இளையராஜாவிடம், பொறுப்போ அறிவோ இல்லாத ஒரு ஊடகர் கேட்ட பீப் கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஊதிப் பெரிதாக்கி வெள்ள பாதிப்புகளை மறக்கடித்தன.
சரியாக ஓராண்டு கழித்து இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டம். மெரீனா கடற்கரை மனித வெள்ளத்தில் மிதந்தது. 6 நாட்கள் அறவழியில் ஒரு கொண்டாட்டமாகத் தொடர்ந்த போராட்டத்தை வேண்டுமென்றே வன்முறை வெறியாட்டத்தோடு முடித்து வைத்தது போலீஸ். குழந்தைகள், சிறுவர்கள், இளம் பெண்கள், முதியவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் கோரத் தாக்குதல் நடத்தியது. போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத, போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவி மெரீனா மீனவர்களை ஏதோ அந்நிய நாட்டு தீவிரவாதிகள் ரேஞ்சுக்குத் தாக்கினர். வீடு வாசல்களை, தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அந்த மக்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். உலகமே மிகக் கோபத்துடன் தமிழக போலீசை திட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று அனிருத்தின் ஆபாச வீடியோ என்ற ஒரு பதிவு வெளியாகியுள்ளது.
இதில் இருப்பது அனிருத்தா அல்லது அவரைப் போன்ற வேறு நபரா என்பதல்ல பிரச்சினை. அவராகவே கூட இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் வெளியிடப்பட்டுள்ள நேரம்... பிரச்சினையை திசை திருப்பத்தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'2015 வெள்ளமாவது இயற்கைப் பிரச்சினை. ஆனால் இந்த போலீஸ் வெறியாட்டம் திட்டமிட்ட வன்முறை. மறந்துவிட மாட்டோம்' என சூளுரைத்துள்ளது இளைஞர் பட்டாளம். ஏதாவது செய்ங்கப்பா!












Click it and Unblock the Notifications