திருச்செந்தூர் அ.தி.மு.க. கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பசாமி பாண்டியன் தாய் வீடு ரிட்டர்ன்?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப்பது அண்ணா தி.மு.க.வுக்கு கூடுதல் பலமாக மட்டுமல்ல.. தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் பல முன்னணி நிர்வாகிகளையுமே சலனப்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வின் அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் அண்ணா தி.மு.க.வுக்கு விரைவில் தாவ உள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது....அதனை நாங்களே நிரப்புவோம் என்று முதல்வர் கனவில் இருந்த பல குட்டி தலைவர்களும் சபதமெடுத்து பேசிவந்தனர்...

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.. இதனால் இந்த 'கனவான்கள்' கப்சிப்பென்றாகிவிட்டனர்.. அதே நேரத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் தங்களது தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் சற்று தெம்புடன் வலம் வரத் தொடங்கிவிட்டனர்..
குறிப்பாக தென்மாவட்டத்தில் அண்ணா தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு தாவிய, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லை கருப்பசாமி பாண்டியன் என்கிற கானா ஆகியோர் அண்ணா தி.மு.க.வுக்கு தாவுவதில் உறுதியாக இருக்கின்றனராம்..
கடந்த சில ஆண்டுகளாகவே அனிதா தாவுகிறார்.. போயஸ் தோட்டத்துக்கு போய்விட்டார் கானா என்றெல்லாம் அவ்வப்போது சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால் இவையெல்லாம் புஸ்ஸாகிவிடுவதும் வாடிக்கை...
இந்நிலையில் வரும் 23-ந் தேதி திருச்செந்தூரில் அண்ணா தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாம்... அதுவும் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று கூறப்படும் நிலையில் இப்பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனிதா, கானா ஆகியோர் இருவருமே மீண்டும் தாய்க் கழகமான அண்ணா தி.மு.க.வு.க்கே திரும்பக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து தி.மு.க. அதிருப்தியாளர்கள் அண்ணா தி.மு.க.வில் ஐக்கியமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் களைகட்டுதோ!












Click it and Unblock the Notifications