அண்ணா நூலகத்தை நீங்கள் பராமரிக்கவில்லை என்றால் ....தமிழக அரசுக்கு எச்சரிக்கையுடன் ஹைகோர்ட் கெடு!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு பராமரிக்கவில்லை என்றால் ஐகோர்ட் குழு அமைத்து பராமரிக்கும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பது தொடர்பான வழக்கில் இறுதி கெடுவை தமிழக அரசுக்கு விதித்துள்ளது சென்னை ஐகோர்ட்.
சென்னை கோட்டூர்புரத்தில் அதி நவீன வசதிகளுடன் அருமையாக உருவாக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம். திமுக தலைவர் கருணாநிதியின் கனவு திட்டமாக அறிவிக்கப்பட்ட நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், தமிழகதில் ஆட்சி மாறியது. அடுத்து வந்த அதிமுக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தது. இதனையடுத்து, பிரச்சனை ஐகோர்ட்டுக்கு சென்றது. இதனால் நூலகம் மூடப்படாமல் காப்பாற்றப்பட்டாலும், பராமரிப்பு என்பது இல்லவே இல்லை.

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரி பேராசிரியர் மனோன்மணியம் ஐகோர்ட்டில் வழக்கை ஒன்றை தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை; ஏ.சி. வசதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது; முழுமையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்துத் தரப்படவில்லை; கலையரங்கம், படிப்பகம் ஆகியவற்றில் விளக்குகள் இல்லை; இவற்றை எல்லாம் சரி செய்து நூலகம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் மனோன்மணியம் கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா நூலகத்தை முறையாக பராமரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டபடி டிசம்பர் 14ம் தேதிக்குள் பராமரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கவுல் இறுதி கெடு விதித்தார். மேலும், நூலகத்தை பராமரிக்க தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஐகோர்ட் தலையிட்டு குழு அமைத்து பராமரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அதிரடியாக தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அக்டோபர் 30ம் தேதிக்குள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து இருக்க வேண்டும் என்றும், இதனை இறுதி வாய்ப்பாக அரசு கருத வேண்டும் என்றும் இல்லை என்றால் கோர்ட் முன்வந்து குழு அமைத்து நூலகத்தை பராமரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications