For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்ன தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணா!

தமிழக மக்களால் தென்னாட்டு பெர்னாட்ஷா என போற்றப்படும் அறிஞர் அண்ணாவின்48வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது நினைவுநாளில் அவரது கொள்கைகளை நினைவு கூர்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அறிஞர் அண்ணா மறைந்து 48ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார்.

இளைஞர் அண்ணா, பெரியாருடன் இணைந்தார். திராவிடர் கழகத்திலிருந்து 1949ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார். 1967ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

அண்ணாவின் மொழி ஆளுமை

அண்ணாவின் மொழி ஆளுமை

அண்ணா சிறந்த இதழாளர். குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்நாட்டு அரசியல் வரை பல்துறைகளில் அவர் ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் இன்றும் ஆய்வுக்குரிய கலைக்களஞ்சியமாகவே விளங்குகின்றன. அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்த மொழி ஆளுமை இளைஞர்களை ஈர்த்தது.

தனிநாடு கோரிக்கை

தனிநாடு கோரிக்கை

திராவிட நாடு என்ற பிரிவினைக்கான காரணங்களை அண்ணா மாநிலங்களவையில் 1962-ல் முன்மொழிந்தபோது, அனைவரும் அதிர்ந்துபோனார்கள். 1962ல் இந்திய-சீனப் போரின்போது அண்ணா இந்தக் கோரிக்கையை நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருதிக் கைவிட்டார். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்' என்று ஒரே வரியில் அளித்த விளக்கம் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியது. இது போன்று அண்ணா எண்ணற்ற சொற்றொடர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

கூட்டாட்சி சுயாட்சி

கூட்டாட்சி சுயாட்சி

1965ல் ஆங்கில இதழொன்றுக்கு அளித்த பேட்டியில், 'கூட்டாட்சி, மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி, அனைவருக்கும் சமஉரிமை போன்ற கொள்கைகளைத் திமுக முன்னிறுத்திப் போராடும்' என்றார். 1967ல் ஆட்சி யமைத்த பிறகு, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றல் ஆகிய முற்போக்கான நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திலேயே அண்ணா மேற்கொண்டார்.

தம்பிக்கு கடிதம்

தம்பிக்கு கடிதம்

1969ல் தம்பிக்கு எழுதிய இறுதி மடலில், 'மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரம் பெறத் தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும்' என்றும் அண்ணா வலியுறுத்தியுள்ளார். மேலும், 'செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, அது கொண்டவனையும் அழித்துவிடும், சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்... பணம் பெட்டியிலே தூங்குகிறது, பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான். ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்' என்ற மொரேவியா நாட்டின் பழமொழியையும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு

மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு

தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது. தனது அறிவு மூலதனத்தால், நேர்மையால், எளிய வாழ்க்கையால், அயராத உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால், மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றியவர் அறிஞர் அண்ணா. மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறினார்.

கெள்கையால் ஈர்த்தவர்

கெள்கையால் ஈர்த்தவர்

அண்ணாவின் கொள்கை முத்துகள் சில:

•கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு
•மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
•கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
•எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
•சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
•மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி
•மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
•நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
•இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
•இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
•நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற பொன்மொழிகளை சொன்னவர்.

அண்ணாநூலகம்

அண்ணாநூலகம்

அண்ணாவின் நினைவு நாளன்று அரசியல் தலைவர்கள் அவரது கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். இன்றைய ஆளும் அரசு அவரது பெயரில் உள்ள நூற்றாண்டு நினைவு நூலகத்தை புதுப்பொலிவு பெறச் செய்யவேண்டும் என்பதே இன்றை இளைய தலைமுறையினரின் கோரிக்கையாகும். வர்தா புயலில் வாடிப்போயுள்ள அண்ணா நூலகம் புதுப்பொலிவு பெருமா? அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துள்ள ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

English summary
Dr. C. N. Annadurai, fondly called Anna by millions of Tamilians, was one of the most charismatic leader of modern India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X