அரக்கோணத்தில் இந்தியாவின் பணக்கார எம்பி.. யாரை சொல்கிறார் அண்ணாமலை? ரூ.1,250 கோடி வரி ஏய்ப்பாம்
ராணிப்பேட்டை: இந்தியாவின் மிகவும் பணக்கார எம்பி அரக்கோணம் தொகுதியில்தான் இருப்பதாக கூறி திமுக எம்பி ஜெகத்ரட்சகனை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அவர், "இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம் தொகுதிக்கு எந்தப் பயனும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தத் திட்டங்களையோ, மக்கள் பணிகளையோ அவர் கொண்டு வந்ததில்லை. மாறாக, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என்ற அவப்பெயர்தான் தொகுதிக்கு வந்திருக்கிறது.

ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவக் கல்லூரியில், கல்வி இடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து டொனேஷன் வாங்கியதை, கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்த 400 கோடி ரூபாய், அவர் நடத்தும் சாராய ஆலையில் எழுதிய பொய்க் கணக்கு 500 கோடி ரூபாய், அவர் நடத்தும் அறக்கட்டளையின் பணத்தை தனது சொந்த செலவுக்காகப் பயன்படுத்திக் கொண்டது 300 கோடி, 25 கோடி ரூபாய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்ததாக போலியாக கணக்கு எழுதியது, மருத்துவக் கல்லூரி இடங்களை விற்க இடைத்தரகர்களுக்குக் கொடுத்தது 25 கோடி என 1,250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் கண்டறிந்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் நீட் அரசியலின் ரகசியமும், டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பதன் ரகசியமும் இந்தப் பணத்தில்தான் இருக்கிறது. ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு இருவரின் சாராய ஆலைகளில் இருந்துதான் டாஸ்மாக் கடைகளுக்கு 44% சாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. டாஸ்மாக்கை மூட திமுக எப்படி முன்வரும்? நீட் தேர்வை ஒழிப்போம் என்று கையெழுத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு நடந்த மைதானத்தைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளில், நீட்டை எதிர்த்து திமுக கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் கிடந்தன.
தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வி வேண்டுமென்றால், நீட் தேர்வு வேண்டும் என்பது திமுக தொண்டர்களுக்கே நன்கு தெரியும். அதனால்தான் திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பை, திமுக தொண்டர்களே குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவர்களாக தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
முதல் பத்து இடங்களில் நான்கு பேரும், முதல் ஐம்பது இடங்களில் பத்து பேரும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். நீட் தேர்வில் நமது மாணவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறி வருகிறது. தமிழக மாணவர்களை இனியும் நீட் தேர்வை வைத்து ஏமாற்ற முடியாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications