ஜெயலலிதாவின் உடல் நிலை... மேலும் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
மதுரை: ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மன வேதனையடைந்த மேலும் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளித்து மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் 21 வயதான ராஜவேல். அதிமுக தொண்டரான இவர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த ராஜவேலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்கு ராஜவேல் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று சென்னை தாம்பரத்தில் சற்குணம் என்ற அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.