இது என்னடா வணிக வளாகங்களுக்கு போதாத காலம்.. புரசைவாக்கம் மாலில் திடீர் தீ விபத்து!
சென்னை புரசைவாக்கத்தில் சிட்டி மால் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை : சென்னை புரசைவாக்கத்திலுள்ள சிட்டிமால் வணிகவளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தையடுத்து தீயை அணைப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
கடந்த 31ம் தேதி அதிகாலையில் சென்னை தி நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 7 மாடிக் கட்டிடத்தில் விட்டு விட்டு எரிந்த தீ 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.
அந்தக் கட்டடம் விதிமீறல் கட்டடம் என்பதாலும் திடீர் திடீரென ஏற்படும் தீயை அணைக்கவும் வசதியாக 7 மாடி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டி மால் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வார விடுமுறையான இன்று மக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும் 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்பு நடவடிக்கைக்காக வணிகவளாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவம் அடங்கும் முன்னரே மற்றொரு வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.