தெளிய விட்டு தெளிய விட்டு பலமாக அடிக்கும் மழை... பயத்தோடு பார்க்கும் சென்னைவாசிகள்
சென்னையில் சில மணிநேரங்கள் இடைவெளி விட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் 2 மணிநேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஞாயிறு இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெளியேறிய மக்கள்
திங்கட்கிழமை முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முடிச்சூர் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

விட்டு விட்டு மழை
செவ்வாய்கிழமையன்று சில மணிநேரங்கள் மழை நின்றது. வெயில் தலைகாட்டியது. இதனால் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியதாக மக்கள் நினைத்தனர். ஆனால் நள்ளிரவில் மீண்டும் பலத்த மழை கொட்டியது.

தெளிய விட்டு அடிக்கும் மழை
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பலரும் உறவினர் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளனர். விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் 2015ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு வெள்ளம் வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
இந்த நிலையில் மீண்டும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.
மழை பெய்வதால் பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சென்னையின் பருவநிலையே குளிர்ச்சியாக மாறிவிட்டது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலரும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். வீட்டை விட்டு அலுவலகம் சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications