வடசென்னையை கலக்கும் பச்சை நிற "ஸ்கைரோனமஸ்" பூச்சிகள் முட்டை போடும் இடம் கண்டுபிடிப்பு!
சென்னை: கொராட்டூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு போகும் மக்கள் மாலை 6 மணி ஆன உடன் பெட்டியை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். காரணம் பச்சை நிற பூச்சித் தொல்லைக்கு பயந்துதான். கடந்த ஒரு வாரகாலமாகவே பூச்சித் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு சுகாதாரத்துறையினர், பூச்சியியல் நிபுணர்களின் கருத்துக்கள் சற்றே ஆறுதல் தரும் விதமாக அமைந்துள்ளது
சென்னை, கொரட்டூர், அம்பத்தூர், சீனிவாசபுரம் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ஸ்கைரோனமஸ் பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்த பூச்சித்தொல்லையை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர்.
லேக் வியூ என்று ஆசை ஆசையாக கொரட்டூர் ஏரிக்கரையில் உள்ள அபார்ட்மெண்டில் குடியேறிய மக்களை நோக்கி அட்டாக் செய்தது அந்த பச்சை நிற பூச்சி. அது மட்டுமல்லாது மாலை நேரங்களில் லைட் போட்டு சற்றே கதவைத் திறந்து காற்றாட அமரமுடியாமல் போனது. காரணம் ஒருவித பூச்சித் தொல்லைதான். எப்படி இந்த பூச்சிகள் வந்தன. ஏன் வருகின்றன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறித்தான் போனார்கள் அம்பத்தூர், கொரட்டூர் பகுதிவாசிகள்.

பரந்து விரிந்த கொரட்டூர் ஏரி
அம்பத்தூர் அருகே 650 ஏக்கர் பரப்பளவில் கொரட்டூர் ஏரியை, பல ஆண்டுகளுக்கு முன் கொரட்டூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் பால்பண்ணை கழிவுநீர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர், ஏரியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரியில் கலந்தது. இதனால், ஏரி மாசடைந்துவிட்டது.

பூச்சிகள் தொல்லை
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரட்டூர் ஏரியில் இருந்து ஸ்கைரோனமஸ் என்ற சிறு பூச்சிகள், இந்த ஏரி தண்ணீரில் உருவானது. இந்த பூச்சிகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு மக்கள் புகார் அளித்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக இருந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக லட்சக்கணக்கான ஸ்கைரோனமஸ் பூச்சிகள், ஏரியில் இருந்து படையெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

தொல்லை தந்த பூச்சிகள்
கொரட்டூர் பகுதிகளான சீனிவாசபுரம், காந்தி நகர், மேட்டு தெரு, பள்ளத் தெரு, எல்லையம்மன் நகர், டிடிபி காலனி, கருக்கு, முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர் உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்கள், வீடுகளில் தினமும் மாலை நேரங்களில் புகுந்து விடுகிறது. மேலும், பொதுமக்கள் கண், மூக்கு, காது, வாய் ஆகியற்றில் நுழைந்து தொல்லை கொடுக்கிறது. இந்த பூச்சிகள் கண்ணில் படுவதால், பார்வை குறைவு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.
எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளை அணைத்த பிறகு, பூச்சிகளின் தொல்லை குறைகிறது. இதையொட்டி, இருளிலேயே சாப்பிட்டு, தூங்கும் அவலநிலை ஏற்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரைக்கும் புகார் போன பின்னர்தான், முதல்வரின் உத்தரவின் பேரில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திக் ஆகியோர் கொரட்டூர் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தனர்.

ரசாயனக்கழிவுகள்
கொரட்டூர் ஏரி தெர்மாகூல், பிளாஸ்டிக், குப்பை, கழிவுகள் நிறைந்து மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மேலும் மாசு ஏற்படுத்தும் வகையில் ரசாயன கழிவுகளும் ஏரியில் மிதக்கின்றன. இதனால் ஏரி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. ரசாயன கழிவுகள் ஏரியின் நீர் மட்டத்தில் மேலே ஒரு அடுக்குபோல படிந்து காணப்படுகிறது.

நீந்த மறுக்கும் வாத்துக்கள்
ஸ்கைரோனமஸ் நுண் புழுக்களை அழிப்பதற்காக ஏரியில் 200 வாத்துகள் விடப்பட்டுள்ளன. ஏரி நீர் மாசு அடைந்து காணப்படுவதால் இந்த வாத்துகள் உள்ளே நீந்தி செல்ல மறுக்கின்றன. ஏரியின் உள்ளே சிறிது தூரத்திற்கு நீந்தி சென்றுவிட்டு உடனே கரை திரும்புகின்றன.
கரை திரும்பும் வாத்துகள், ஏரி நீரின் வர்ணத்துக்கு ஏற்ப பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. அசவுகரியமாக இருப்பதால் ஏரியின் உள்ளே செல்ல மறுத்து வாத்துகள் கூட்டமாக கரை ஒதுங்குகின்றன. இவ்வாறு ஒதுங்கும் வாத்துகளை மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே செல்லுமாறு கரையோரத்தில் நின்று குச்சிகளால் விரட்டுகின்றனர்.

பூச்சியியல் நிபுணர்கள் ஆய்வு
நெல்லை மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை தலைவரும், விஞ்ஞானியுமான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட், பேராசிரியர்கள் தேவநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் நேற்று கொரட்டூர் ஏரிக்கு வந்தனர். அவர்கள் ஏரியில் உள்ள நுண்புழுக்களை சேகரித்தனர். சிறிய புழுக்கள் முதல் பெரிய புழுக்கள் வரையிலும் வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் எடுத்து ஆய்வு செய்தனர்.

ஒளிரும் ஏரி
இதையடுத்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஸ்ககைரோனமஸ் பூச்சி ஒழிப்பு பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்தார். கொரட்டூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. ஸ்கைரோனமஸ் பூச்சிகள் புழுக்களாக இருந்து வளரும்போதே அழிக்கும் வண்ணம் அந்த ஏரியில் வாத்துகள் விடப்பட்டுள்ளன. ஸ்கைரோனமஸ் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் விளக்குகள் ஏரியை சுற்றிலும் போடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் எண்ணெய்யில் நனைத்த காகிதங்களை வீடுகளில் பொதுமக்கள் தொங்கவிட்டுள்ளனர்.

உற்பத்தியாகும் இடம் எது?
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் ஷீலா உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். இயற்கையான முறையில் ஸ்கைரோனமஸ் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை தடை செய்ய அதிகாரிகள் குழுவினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பூச்சியியல் நிபுணரான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட் தலைமையிலான குழுவினர் ஸ்கைரோனமஸ் பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

எளிதாக அளிக்கலாம்
பூச்சியியல் நிபுணரான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஸ்கைரோனமஸ் பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்தே அதனை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்தவேண்டும் என்பதை ஆராய்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். ஏரியில் உள்ள நீரில் காணப்பட்ட நுண்புழுக்களை எடுத்து ஆய்வு செய்தோம். சுற்றுச்சூழல் மாசுபடும் இடங்களில் இந்த வகையான ஸ்கைரோனமஸ் பூச்சிகள் காணப்படும். இந்த பூச்சிகள் கடிக்காது. அதே சமயத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்களில் இருந்து நீர் ஒழுகுதல், மூக்கு வடிதல், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.

தீயில் சாகும் பூச்சிகள்
ஸ்கைரோனமஸ் பூச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை வெளிச்சத்தை தேடி பறந்து செல்லும். இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை போட்டு எரித்தால், அந்த தீயில் விழுந்து இறந்துவிடும். வீடுகளில் தேங்கிய கழிவு நீரில் இருந்தே ஸ்ககைரோனமஸ் பூச்சிகளை உருவாக்கும் புழுக்கள் உற்பத்தியாகின்றன. இதனை சில வீட்டின் அருகே தேங்கியிருந்த கழிவு நீரில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம்.ஆகவே ஸ்கைரோனமஸ் புழுக்களை ஒழிக்க தேங்கிய கழிவு நீரில் பிளீச்சிங் பவுடர் போடவேண்டும். மேலும் வீடுகளின் அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதனை செய்தால் ஸ்கைரோனமஸ் பூச்சிகளை ஒழித்துவிடலாம்.

நிரந்தரமாக ஒழிப்போம்
இரவு நேரங்களில் தீப்பந்தங்களை எரிக்க வேண்டும். மழைக்காலத்துக்கு முந்தைய லேசான மழை பெய்யும் சூழல் ஸ்கைரோனமஸ் பூச்சிகளுக்கு ஏற்ற சூழல் ஆகும். மழைக்காலங்கள் தொடங்கிய பின்னர் இந்த பூச்சிகளின் தொல்லை இருக்காது. மீன்களுக்கு உணவாக ஸ்கைரேனமஸ் புழுக்கள் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிரந்தரமாக ஸ்கைரோனமஸ் பூச்சி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம் என்று கூறியுள்ளார்.

அச்சம் தேவையில்லை
முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கு இணங்க, ஸ்கைரோனமஸ் பூச்சிகளை ஒழிப்பதற்கு பொது சுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜெ. ராதகிருஷ்ணன். தெளிப்பான்கள் மூலம் மருந்துகள், குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கைரோனமஸ் பூச்சிகளையும் நிரந்தரமாக ஒழித்துவிடுவோம். ஆகையால் பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையவேண்டாம் என்றும் அவர் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஏரியில் ரசாயனம் கலப்பதை தடுத்து, தண்ணீரை சுத்தப்படுத்தவேண்டும் என்று பூச்சியியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications